கர்நாடகா தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு- கன்னடர்களுக்கே 100% வேலை தர கோரும் மசோதா நிறுத்தி வைப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலைவாய்ப்பு தர வேண்டும் என்கிற மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என்றும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில அமைச்சரவையானது மாநிலத்தின் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும் என்கிற மசோதாவுக்கு ஒப்புதல் தந்தது. இந்த மசோதாவானது, கர்நாடகாவின் தனியார் நிறுவனங்களில் சி,டி பணியாளர் பணியிடங்களை 100% கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்; தனியார் நிறுவன மேலாளர் உள்ளிட்ட நிர்வாக பணிகளில் கன்னடர்களுக்கு 50% வழங்க வேண்டும்; தனியார் நிறுவனங்களில் நிர்வாகம் அல்லாத இதர பணிகளில் கன்னடர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர்கள்; கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து கன்னட மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் இந்த இடஒதுக்கீடு உரிமையைப் பெறக் கூடியவர்கள்; கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர மறுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தது.

இதற்கு கர்நாடகாவில் இயங்கி வரும் முன்னணி தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டுமே தவிர தொழில் நிறுவனங்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த கடும் எதிர்ப்பால் கன்னடர்களுக்கு 100% வேலை மசோதா தொடர்பான தமது எக்ஸ் பக்க பதிவை முதல்வர் சித்தராமையா நீக்கி இருக்கிறார். மேலும் கன்னடர்களுக்கான அரசுதான் தமது அரசு எனவும் விளக்கம் தந்துள்ளார்.

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், முதலீட்டாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கர்நாடகாவுக்கு அதிக முதலீட்டாளர்கள் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். கன்னடர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கவலை. கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஆராய்வோம் என்றார்.
இதனிடையே இந்த சர்ச்சைக்குரிய மசோதாவை கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், கன்னடர்களுக்கு 100% வேலை தர கோரும் மசோதா இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்மசோதா குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார். அதாவது கர்நாடகா தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை வழங்க வேண்டும் என்கிற மசோதாவை கர்நாடகா அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications