"சடலத்தை பலாத்காரம் செய்வது குற்றமல்ல.. " கர்நாடக உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு.. என்ன காரணம்
பெங்களூர்: உயிரிழந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது தற்போதுள்ள இந்திய சட்டப்படி குற்றமாகக் கருதப்படாது என்றொரு அதிர்ச்சி தீர்ப்பைக் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 21 வயது பெண்ணை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்தது குறித்த வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அதில் தான் நீதிமன்றம் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
பெண்ணின் சடலத்தைப் பலாத்காரம் செய்வது ஆகியவை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் இயற்கைக்கு மாறான குற்றம் அல்லது பலாத்கார குற்றத்தின் கீழ் வராது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 21 வயது பெண்ணை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்தது.

இருப்பினும், அவர் மீதான கொலை குற்றும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மாற்றம் இல்லை என்றும் இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டைகளில் மாற்றம் இல்லை. மேலும், நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நெக்ரோபிலியா குற்றமாகக் கருதப்படுவதை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
என்ன கேஸ்: கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 21 வயது இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்குத் தண்டையையும் வழங்கி இருந்தது. இதை எதிர்த்துத் தான் அந்த நபர் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், முதலில் குற்றவாளி மீது சந்தேகத்திற்கு இடமின்றி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதைத் தெளிவுபடுத்திவிட்டனர். அதாவது, குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஆதாரங்கள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்கள், அரசுத் தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில், கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
கருத முடியாது: மேலும், குற்றவாளியின் வீட்டில் இருந்த துணியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்தம் அடங்கிய துணியும் கண்டறியப்பட்டுள்ளது என்றனர். அதன் பின்னர் சடலத்துடன் உடலுறவு கொண்ட புகார் குறித்து நீதிமன்றம் தீர்ப்பை அளித்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 (பலாத்காரம்) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) கீழ் இதை ஒரு குற்றமாகக் குறிப்பிட்டாலும்... இறந்த உடலை மனிதனாகக் குறிப்பிட முடியாது என்பதால் தற்போதுள்ள விதிகளின் கீழ் இதைக் குற்றமாகக் கருத முடியாது.
சட்டம் பொருந்தாது: மேலும், இறுதிச் சடங்கின் போது, அத்துமீறி நுழைந்து சடலத்தை அவமதிப்பது என்ற விதிகளும் இதற்குப் பொருந்தாது. இறந்தவர்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதை நீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது.
எனவே, இறந்த நபரின் கண்ணியத்திற்கான உரிமையைப் பராமரிக்க மத்திய அரசு, ஐபிசியின் 377வது பிரிவின் விதியை திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. அல்லது இறந்த பெண்ணுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக ஒரு தனி விதியை கொண்டு வரலாம். பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இது குறித்த சட்டங்கள் இருக்கிறது" என்றது.
இது மட்டுமின்றி ஆறு மாதங்களுக்குள் கர்நாடகாவில் பிணவறைகளில் சிசிடிவிகளை நிறுவவும், மருத்துவப் பதிவுகள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications