பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது.. தயிர் விலையும் அதிகரிக்கிறது.. கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சி
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நந்தினி பால் மற்றும் தயிர் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி நந்தினி பால் மற்றும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் கர்நாடக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைத்து தரப்பினரும் எடுத்துக்கொள்ளும் உணவாகப் பாலும் பால் பொருட்களும் இருக்கிறது. இதன் காரணமாகவே குறைந்த விலை பால் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு மாநில அரசுகளும் பால் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

நந்தினி பால் & தயிர்
உதாரணத்திற்குத் தமிழ்நாட்டில் ஆவின், கர்நாடகாவில் நந்தினி உள்ளிட்ட பிராண்டுகளை சொல்லலாம். மேலும், பால் அல்லது பால் பொருட்களின் விலையேற்றமும் ரொம்பவே சென்சிடிவ்வான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் நந்தினி பால் மற்றும் தயிர் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களின் விலையும் 4 ரூபாய் வரை உயரும் நிலையில், இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் கர்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே. வெங்கடேஷ் அறிவித்தார். பால் பண்ணையை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.
விலை உயர்வு அமல்
அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்தக் கூட்டத்தில் தான் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கர்நாடகாவில் உள்ள பால் பண்ணையை ஊக்குவிப்பதற்காக நந்தினி பால் மற்றும் தயிரின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்த ஆகும் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டே விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
விலை உயர்வின் பலன்களை மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜூன் 26ம் தேதி நந்தினி பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு இருந்தது. அதை ரத்து செய்கிறோம். அதற்குப் பதிலாக இந்த விலை உயர்வை அமல்படுத்துகிறோம்" என்றார்.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படும் நந்தினி பால் மற்றும் தயிர் பொருட்கள்
டோன்ட் பால்: புதிய விலை லிட்டருக்கு ரூ.46 (பழைய விலை ரூ.42)
ஹோமோஜெனஸ் செய்யப்பட்ட டோன்ட் பால்: புதிய விலை லிட்டருக்கு ரூ.47 (பழைய விலை ரூ.43)
பசும்பால் (பச்சை பாக்கெட்): புதிய விலை லிட்டருக்கு ரூ.50 (பழைய விலை ரூ.46 இலிருந்து)
சுபம் பால்: லிட்டருக்கு ரூ.52 (பழைய விலை ரூ.48)
தயிர்: லிட்டருக்கு ரூ.54 (பழைய விலை ரூ.50)












Click it and Unblock the Notifications