தொடரும் மழை- கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு 12,500 கனஅடி காவிரி நீர் திறப்பு!
பெங்களூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவை கர்நாடகா அரசு அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தற்போது வினாடிக்கு 12,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து வைத்தார். இதனையடுத்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரசரவென குறையவும் தொடங்கியது. அதே நேரத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய காவிரி நீரும் வந்தும் சேரவில்லை. இது தொடர்பாக கர்நாடகா அரசுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் டெல்லி சென்ற தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து காவிரி நீர் திறப்பு தொடர்பான தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தை சிலநாட்களுக்கு முன்னர் வழங்கினார்.
அக்கடிதத்தில், தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர்திறந்துவிடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள்மட்டுமே பாசனத்துக்குப் பயன்படும். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளது.
தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்துக்கும் உள்ள இடைவெளி மிகவும்அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்திசெய்யஇயலும். கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே, தமிழகத்தில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும். எனவே இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக காவிரியில் 5,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடப்படக் கூடிய கபினி அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடிநீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12,500 கன அடி காவிரி நீர் திறந்துவிடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீரும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகா திறந்துவிடும் காவிரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என்பது தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications