ரொம்ப மிரட்டுறாங்க.. கடிதம் எழுதி தூக்கிட்டு மடாதிபதி தற்கொலை.. கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி
பெங்களூர்: ரொம்ப மிரட்டுறாங்க எனக்கூறி கடிதம் எழுதிவிட்டு கர்நாடகாவில் பிரபலமான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டம் காஞ்சுக்கல் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45.
400 ஆண்டுகள் பழமையான இந்த மடம் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தது. இந்த மடத்தின் மடாதிபதியாக கடந்த 1997 முதல் பசவலிங்க சுவாமி செயல்பட்டு வந்தார்.
திருடிய வீட்டிலேயே தற்கொலை! நகை, பணத்தை மூட்டை கட்டி தூக்கில் தொங்கிய திருடன் - பெங்களூரில் மர்மம்
சில்வர் ஜூபிளி விழா
மடாதிபதியாக பொறுப்பேற்று 25 ஆண்டு ஆனதை சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழாவாக பசவலிங்க சுவாமி கொண்டாடினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூங்க சென்றார். நேற்று காலையில் நீண்டநேரம் ஆனபோதும் மடத்தில் உள்ள பூஜை திறக்கப்படவில்லை. அதாவது பசவலிங்க சுவாமி வழக்கமாக அதிகாலை 4 மணி முதல் பூஜை அறையில் பூஜை செய்வார். அப்போது கதவு திறக்கப்பட்டு இருக்கும். ஆனால் தீபாவளி தினமான நேற்று காலை 6 மணிக்கு பூஜை அறை பூட்டப்பட்டு இருந்தது.
தூக்கிட்டு தற்கொலை
இதனால் மடத்தில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். அறை கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது செல்போனுக்கு போன் செய்தனர். மடாதிபதி பசவலிங்க சுவாமி எடுத்து பேசவில்லை. இதனால் அறையின் பின்புலத்தில் உள்ள துளை வழியே பார்த்தனர். அப்போது அறையின் ஜன்னலில் உள்ள கிரீல் கம்பியில் தூக்குப்போட்டு பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
2 பக்க கடிதம்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறையின் கதவை உடைத்து மடாதிபதி பசவலிங்க சுவாமியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மடத்தில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக பசவலிங்கசுவாமி எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
கடிதத்தில் இருந்தது என்ன?
இந்த கடிதம் 2 பக்கங்கள் கொண்டது. கடிதத்தில், பஞ்சுகால் பாண்டே மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டினர். இந்த மிரட்டலால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தனது தற்கொலைக்கு காரணமான நபர்களின் பெயர்களை அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவரது தற்கொலை தொடர்பாக கடிதத்தில் இருந்த முக்கிய விஷயங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
தீவிர விசாரணை
இதுகுறித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும் மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி எழுதிய கடிதத்தில் இருக்கும் பெயர்களின் அடிப்படையில் அந்த நபர்களிடம் போலீசார் தேட தொடங்கி உள்ளனர். மேலும் மடாதிபதி பசவலிங்க சுவாமியின் செல்போனில் கடைசியாக வந்த அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து அதனடிப்படையில் விசாரணையை துவஙக்கி உள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓராண்டில் 2வது தற்கொலை
கர்நாடகாவில் மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இதே ராமநகர் மாவட்டம் சிலும்பி மடத்தின் மடாதிபதி இதேபோல் ஜன்னல் கம்பியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரும் பசவலிங்க சுவாமி தான். இவர் உடல்நலக்குறைவு தொடர்பான பிரச்சனையால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தான் தற்போது காஞ்சுக்கல் பாண்டே மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை செய்துள்ளார். ஓராண்டுக்குள் 2 மடாதிபதிகள் தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.