சித்தராமையா - மனைவி உள்பட 4 பேர் மீதும் பாய்ந்த வழக்கு.. முடா முறைகேடு வழக்கில் முற்றிய நெருக்கடி
பெங்களூர்: முடா முறைகேடு மூலம் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கிய புகாரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் போட்ட உத்தரவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து கர்நாடகா லோக்ஆயுக்தா போலீசார் முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவை ஏ1 குற்றவாளியாக்கி அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அவரது மனைவி பார்வதி உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராக உள்ளார். முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இதற்கிடையே தான் சித்தராமையா மீது பரபரப்பான புகார் கிளம்பியது. அதாவது மைசூர் நகர மேம்பாட்டு வாரியம் ‛முடா' (MUDA) சார்பில் சித்தராமையாவின் மனைவிக்கு பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதில் சித்தராமையாவின் பங்கு உள்ளதாக புகார் எழுந்தது. இதனை சித்தராமையா மறுத்த நிலையில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் சென்றது. இந்த புகாரை பெற்ற ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முடா முறைகேடு புகார் தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கினார். இது சித்தராமையாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இதையடுத்து தன்மீது வழக்கு பதிய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி சித்தராமையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 24ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசண்ணா தீர்ப்பு வழங்கினார்.
அப்போது ‛முடா' முறைகேடு தொடர்பாக தனிநபர் புகார் மீதுவிசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது. இதனால் அவரது உத்தரவில் தவறு இல்லை எனக்கூறி சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இது சித்தராமையாவுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து தான் முடா முறைகேடு தொடர்பான புகாரில் நேற்று முதல்வர் சித்தராமையா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகா லோக்ஆயுக்தா போலீசார் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துணர் மல்லிகார்ஜூன சுவாமி, தேவராஜூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சித்தராமையாக ஏ1 குற்றவாளியாகவும், சித்தராமையாவின் மனைவி பார்வதி ஏ2 குற்றவாளியாகவும், மைத்துணர் மல்லிகார்ஜூன ஸ்வாமி ஏ3 குற்றவாளியாகவும், வீட்டு மனைவியை மல்லிகார்ஜூன ஸ்வாமிக்கு விற்பனை செய்த தேவராஜூ ஏ4 குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 120பி, 166, 403, 406, 40, 426, 465, 340, 351, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 9, பிரிவு 13, சட்டவிரோத பினாமி சொத்து பரிமாற்ற தடுப்பு சட்ட பிரிவு 3, 53, 54, கர்நாடகா நில முறைகேடு தடுப்பு சட்டப்பிரிவு 3, 4 உள்பட மொத்தம் 17 பிரிவுகளில் லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் சித்தராமையாவுக்கு எதிராக புகார் அளித்த புகார்தாரர்களில் ஒருவராக ஸ்னேகாமாயி கிருஷ்ணா சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கை லோக்ஆயுக்தாவிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை என்பது செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இது சித்தராமையாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதுதவிர தற்போது கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால் சித்தராமயைா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. முறைகேடு, ஊழல் புகாரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை பாஜகவினர் ராஜினாமா செய்ய கூறினார்களா? அதனால் நான் ராஜினாமா செய்யமாட்டேன். கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications