கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் மதுசாமி திடுக் தகவல்
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டதாக அம்மாநில அமைச்சர் மதுசாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் 25,317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் 402 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க தீவிர லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு, சமூக பரவலாக மாறவில்லை என முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார்.
இதனையே அமைச்சர்கள் அஸ்வத் நாராயண், சுதாகர் உள்ளிட்டோரும் கூறிவந்தனர். தற்போது அமைச்சர் மதுசாமி, கர்நாடகாவில் கொரோனா தாக்கம், சமூகப் பரவலாக மாறிவிட்டது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மதுசாமி கூறியதாவது:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் தும்கூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிர் பிழைப்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் என்பது சமூக பரவலாக மாறி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அமைச்சர் மதுசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications