கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணம்.. முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல்!
பெங்களூர்: கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி (61) மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். கர்நாடக மாநிலத்தில் உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள், வனத்துறை அமைச்சராக இருந்தார் உமேஷ் கட்டி.
அவர் தனது வீட்டில் குளியலறையில் மாரடைப்பு காரணமாக உமேஷ் கட்டி சரிந்து விழுந்தார். குளியலறையிலேயே அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
இதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட கட்டி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் மரணம் அடைந்தார்.

அமைச்சர் மரணம்
மரணம் அடைந்த அமைச்சர் உமேஷ் கட்டிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உமேஷ் கட்டிக்கு உடலில் நாடிதுடிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செய்தி கேட்டதும் மாநில அமைச்சர்கள் பலர் உடனுக்குடன் மருத்துவமனைக்கு சென்றனர். உமேஷ் கட்டிக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி நேரில் ஆய்வு செய்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் இவருக்கு அவசர சிகிச்சை கொடுத்தும் பலன் அளிக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது
உமேஷ் கட்டி மரணத்திற்கு பாஜக தலைவர்கள்., கர்நாடகா அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று உமேஷ் கட்டி உடலை பார்த்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பொம்மை, நான் என் நண்பனை இழந்துவிட்டேன். என் நெருக்கமான நண்பர் இன்று என்னுடன் இல்லை. இந்த மாநிலம் ஒரு சிறந்த அமைச்சரை இழந்துவிட்டது. ஒரு நல்ல அரசியல் தலைவரை இழந்துவிட்டது. அவர் எனக்கு சகோதரர் போன்றவர்.

இரங்கல்
அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்தன. உடலில் சில நோய் குறைபாடுகள் இருந்தன. ஆனால் அவர் இந்த அளவிற்கு பாதிக்கப்படுவார் என்று நினைக்கவில்லை. அவர் பல துறைகளை சிறப்பாக கவனித்துக்கொண்டார். அவர் மிக சிறந்த அரசியல் தலைவர். இந்த மாநிலத்திற்காக நிறைய செய்து இருக்கிறார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று முதல்வர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டார். உமேஷ் கட்டி கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹுக்கேரி பகுதியில் 1961ல் பிறந்தார்.

யார் இவர்?
இவரின் அப்பா விஸ்வநாதன் கட்டியின் மறைவிற்கு பின் 1985ல் இவர் முழு நேர அரசியலுக்கு வந்தார். 2008ல் இவர் பாஜகவில் இணைந்தார். அதற்கு முன்பாக மதசார்பற்ற ஜனதா தளம், ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் ஜே எச் படேல், எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் அமைச்சரவையில் இவர் அமைச்சராக இருந்துள்ளார். வடக்கு கர்நாடகாவை இவர் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார்.












Click it and Unblock the Notifications