மனைவிக்கு 14 மனைகள்: சித்தராமையாவுக்கு எதிராக கீழ் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க தடை- ஹைகோர்ட்
பெங்களூர்: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியமான "மூடா" கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் சித்தராமையா மீது விசாரணை நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூடாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கொடுத்ததற்கு எதிரான வழக்கு விசாரணை முடியும் அவரை சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான "மூடா" என்ற அரசு நிறுவனமானது முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த வீட்டு மனை ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பது பாஜகவின் புகார். ஆனால் சித்தராமையாவோ, மனைவி பார்வதி பெயரிலான 3.14 ஏக்கர் நிலத்தை மூடா நிறுவனம்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தது. இதற்கு இழப்பீடாகவே 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன என விளக்கம் கொடுத்தார். ஆனாலும் இதனை பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் நிராகரித்தன.

மூடா விவகாரத்தில் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பெங்களூர்- மைசூர் பாதயாத்திரை நடத்தின. மேலும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடமும் புகார் கொடுத்தன. அத்துடன் பெங்களூர் வழக்கறிஞர் பிரதீப்குமார், லோக் அயுக்தாவிலும் புகார் கொடுத்தார்.
இதனிடையே வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் அனுமதி கேட்டனர். இதனடிப்படையில் கடந்த மாதம் 26-ந் தேதி, முதல்வர் சித்தராமையா விளக்கம் தர கோரி ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. அத்துடன் கர்நாடகா அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் தமது நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த பின்னணியில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஆளுநர் கெலாட்டை வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆகியோர் மீண்டும் சந்தித்து இந்த உத்தரவு நகலைப் பெற்றனர். இதனை கர்நாடகா மாநில தலைமைச் செயலாளரிடமும் மூவரும் கொடுத்தனர்.
இதனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் சித்தராமையாவோ தாம் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் போது சித்தராமையா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் தமது வாதத்தின் போது ஆளுநர் என்பவர் அமைச்சரவை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்; ஆனால் கர்நாடகா ஆளுநர் அப்படி செயல்படவில்லை என்றார். ஆளுநர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மனு மீதான விசாரணை முடியும் வரை கீழ் நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என தடை உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications