தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்
பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் மும்பையில் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு வருவதாக சட்டசபையில் இன்று அமைச்சர் டி கே சிவகுமார், பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், அதில் 15 பேர் மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்கள் மீது, சபாநாயகர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபையில் இன்று அமைச்சர் டி கே சிவகுமார் ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்பினார். அவர் கூறுகையில், மும்பையில் உள்ள எங்களது எம்எல்ஏக்கள் துப்பாக்கி முனையில் சிலரால் கடத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலை மீது துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மிரட்டி மிரட்டியே அவர்களை பேட்டிகள் அளிக்க செய்து வருகின்றனர்.
எனவே அந்த எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு அளித்து பெங்களூர் அழைத்து வர வேண்டியது சபாநாயகர் ஆகிய உங்கள் கடமை என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட, சபாநாயகர், இதுபோல எம்எல்ஏக்கள் மிரட்டலுக்கு உட்பட்டிருந்தால் அது தொடர்பாக அவர்கள் எனக்கு புகார் அளித்து இருக்க வேண்டும். அல்லது அவரது ரத்த சம்பந்த உறவுகள், புகார் அளிக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல் நீங்கள் சொல்வதை கேட்டு நான் நடவடிக்கை எடுக்க கூடிய இடத்தில் இல்லை, என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
எம்எல்ஏக்கள் துப்பாக்கி முனையில் இருப்பதாக கூறி அவர்களை சபாநாயகரின் உத்தரவின்பேரில். பெங்களூர் அழைத்து வந்துவிடலாம் என்று சிவகுமார் திட்டமிட்டு காய் நகர்த்தி இருக்கலாம் என்று பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையிலேயே அவர்கள் துப்பாக்கி முனையில் தான் கடத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது உண்மை என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications