தமிழ்நாடு டூ கர்நாடகா...இ பாஸ் தேவையில்லை...புதிய தளர்வுகள் அறிவிப்பு!!
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மார்ச் மாதத்துக்குப் பின்னர் அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. இனி மாநிலத்துக்குள் வருவதற்கு இ பாஸ் தேவையில்லை. மாநிலத்துக்குள் வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை போன்ற தளர்வுகளை அறிவித்துள்ளது.
நாட்டில் ஒரு மாநிலத்துக்குள் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்வதற்கும், மாநிலத்துக்குள் செல்வதற்கும் எந்த தடைகளையும் விதிக்கக் கூடாது என்று அன் லாக் 3.0ல் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் இதுவரை விதிக்கப்பட்டு இருந்த அனைத்து தளர்வுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் நாட்டின் எந்த மாநிலத்திலும் இருந்தும் கர்நாடகா மாநிலத்திற்குள் வரலாம், சேவா சிந்து இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை.

மாநில எல்லைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ பரிசோதனை முகாம்கள் நீக்கப்படுகின்றன. மாநிலத்திற்குள் வருபவர்கள் சாலை மார்க்கமாக, பொதுத்துறை வாகனங்கள் வாயிலாக வரலாம் என்று கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது. விமானம், ரயில் மூலமும் வரலாம். எந்த தடையும் இல்லை. மாநிலத்திற்குள் வந்த பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை.
கர்நாடகா மாநில அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருப்பவர்கள் மாநிலத்திற்குள் வரும்போது, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது பற்றி அரசுக்கு தெரிவித்தால் மட்டும் போதும். அவர்கள் தங்களை தாங்களாகவே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களது பணிகளை தொடங்கலாம். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் 14410 என்ற ஆப்தமித்ரா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து அவர்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கட்டாயமாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும். கை சானிடைசர் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். பொது வெளியில் இருமும்போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்குள் செல்வதற்கு இ பாஸ் வாங்க வேண்டியது இல்லை. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வரவேண்டுமானால், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அல்லது மறு அறிவிப்பு வரும் வரை இ பாஸ் தேவை.
கர்நாடகா மாநிலத்திற்குள் வருவதற்கு கடந்த ஆறு மாதங்களில் 11 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 2.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 1.98 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர். 4,810 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications