கர்நாடகாவில் அதிர்ச்சி...ஆகஸ்டில் மட்டும்...கொரோனாவுக்கு 2,656 பேர் உயிரிழப்பு!!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழந்து இருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு 2,656 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த 25ஆம் தேதி மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் 56% சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று சதவீதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்றே உயிரிழந்துள்ளனர். 4.5% பேர் மருத்துவமனைக்கு வருதவற்கு முன்பு அல்லது வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கு முன்பு உயிரிழந்து உள்ளனர்.
இந்த உயிரிழப்பை தவிர்க்க முன்கூட்டியே பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்தளவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்கிறோமா அந்தளவிற்கு உயிரிழப்பையும் கட்டுப்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்து இருக்கும் கருத்தில், ''துவக்கத்திலேயே கண்டறிந்து விட்டால், நுரையீரலுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம். ரத்தத்தில் எந்தளவிற்கு ஆக்சிஜன் இருக்கிறது என்பதை கண்டறியலாம். எக்ஸ்ரே மற்றும் ரத்த ஆய்வுகள் மூலம் இவற்றை கண்டறியலாம். வைரஸ்க்கு எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கலாம் அல்லது ஸ்டீராய்டு ஊசி போடலாம். ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதால், உயிரிழப்பும் அதிகரிக்கிறது'' என்று தெரிவித்துள்ளனர்.
ஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக நாடுகளில் இந்தியா தொடர் முதலிடம்- 24மணிநேரத்தில் 77,266 பேருக்கு தொற்று
கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை கொரோனாவுக்கு 2,656 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மருத்துவமனையில் மட்டும் 124 பேர் ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2,656 பேர் உயிரிழந்து இருப்பதில் 950 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு ராஜீவ் காந்தி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சி. நாகராஸ் கூறுகையில், ''மருத்துவமனைக்கு இறுதி நேரத்தில் வருவதால் காப்பாற்ற முடியாமல் போகிறது. 30%-40% வரையிலான நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்றே உயிரிழக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களை காப்பாற்ற போதிய நேரம் மருத்துவர்களுக்கு கிடைப்பதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.