கர்நாடகா: எடியூரப்பா மகன் தலைவரான நேரம்.. பாஜகவை விட்டு சீனியர் சோமண்ணா எஸ்கேப்- கதவை திறந்த காங்.
பெங்களூர்: கர்நாடகா பாஜகவில் அதிருப்தி புயல் மையம் கொள்ள தொடங்கிவிட்டது. கர்நாடகா பாஜக தலைவர் பதவி எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு தாரை வார்க்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் சோமண்ணா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்து 7 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் கர்நாடகா மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என முடிவு செய்ய முடியாத அளவுக்கு கர்நாடகா பாஜகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டமாக உள்ளது. இதேபோல சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நளீன் கட்டீல், பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய மாநில பாஜக தலைவரையும் நியமிக்க முடியாமல் பாஜக மேலிடம் தத்தளித்தது.

இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் விஜயேந்திரா நியமன அறிவிப்பு வெளியானதில் இருந்தே கர்நாடகா பாஜகவில் அதிருப்தி குரல்கள் பகிரங்கமாக வெடித்திருக்கின்றன. மாநில பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர் சிடி ரவியும் அவரது ஆதரவாளர்களும் கொந்தளித்து கொண்டிருக்கின்றனர்.
இதேபோல மாநில பாஜக தலைவர் பதவியை ரொம்பவே எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர் சோமண்ணா இப்போது பாஜகவை விட்டே ஓட முடிவு செய்துவிட்டாராம். கர்நாடகா சட்டசபை தேர்தலின் போதே பாஜகவின் பலி ஆடு என கிண்டலடிக்கப்பட்டவர் சோமண்ணா. தமது சொந்த தொகுதியான கோவிந்தராஜ் நகரை விட்டு பாஜக மேலிட உத்தரவால் வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்டார் சோமண்ணா. இதேபோல சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் 2 தொகுதிகளிலும் சோமண்ணா படுதோல்வி அடைந்தார். பாஜக மேலிட உத்தரவை ஏற்று தேர்தலில் போட்டியிட்டு அவமானகரமாக தோல்வி அடைந்த தமக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து பாஜக ஆறுதல்படுத்தும் என்பது சோமண்ணாவின் எதிர்பார்ப்பு. ஆனால் தற்போது பலி ஆடாக தேர்தல் களத்தில் தோல்வியை பெற்றதுதான் மிச்சம் என்கிற நிலையில் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி கிடைத்துவிட்டது.
இதனால் பாஜகவை விட்டு விலக முடிவு செய்துள்ள சோமண்ணா, காங்கிரஸில் இணைய இருக்கிறார். இது தொடர்பாக துணை முதல்வர் டிகே சிவகுமாருடனான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். அத்துடன் தும்கூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக சோமண்ணாவை நிறுத்தவும் வாக்குறுதி தரப்பட்டுவிட்டதாம். இதனால் சுபவேளையில் பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸை நோக்கி ஓடிவரப் போகிறாராம் சோமண்ணா ஜி!.












Click it and Unblock the Notifications