ரூ9,000 கோடியில் மேகதாது அணையை 100% கட்டியே தீருவோம்... கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பிடிவாதம்
பெங்களூரு: காவிரியின் குறுக்கே ரூ9,000 கோடியில் மேகதாது அணையை 100% கட்டியே தீருவோம் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசும் கூட மறைமுகமாக கர்நாடகாவை ஆதரிக்கிறது என்பதுதான் தமிழகத்தின் குற்றச்சாட்டு.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் உறுதியான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழகம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த வ்ழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது, டெல்லி: மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தற்போது விசாரிக்கப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தமிழக அரசியல்வாதிகள் மீது விமர்சனம்
இந்த நிலையில் பெல்லாரியில் செய்தியாளர்களிடம் பசவராஜ் பொம்மை கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை நாம் அனைவரும் அறிவோம். தமிழக அரசியல்வாதிகள் மக்களை குழப்புகின்றனர். தமிழகத்திடம் அணை கட்டுமானம் தொடர்பான எந்த விவரமும் இல்லாமல் எதிர்க்கிறது. இதனை நாம் ஏற்க முடியாது.

குழப்பும் தமிழக அரசியல்வாதிகள்
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தால் எதையும் செய்ய முடியாது. நாம் 100% மேகதாது அணையை கட்டியே தீருவோம். மேகதாது அணை விவகாரத்தில் நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நமது சட்டப்போராட்டம் தொடரும். ரூ9,000 கோடியில் பெங்களூரு குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி நீரை தேக்குவதற்கு மேகதாது அணை கட்டப்படுகிறது. அத்துடன் 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

நில ஒதுக்கீடு விவகாரத்தில் கறார்
துங்கபத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். பல்லாரி பகுதியில் 10,12 ஆண்டுகளுக்கு முன்னதாக இரும்புத்தாது, எரிசக்தி தொழிற்சாலைகள் அமைக்க பெரும் எண்ணிக்கையில் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். ஒதுக்கீடு செய்தும் பயன்படுத்தாத நிலங்கள் கண்டறியப்பட்டு அவை திரும்பப் பெறப்படும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.












Click it and Unblock the Notifications