2013 முதல் கடைசி தேர்தல் என சொல்லியே முதல்வர் பதவியை கைப்பற்றும் சித்து எனும் சித்தராமையா!
பெங்களூரு: கர்நாடகா அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக இதுதான் கடைசி தேர்தல் என சொல்லி சொல்லியே முதல்வர் நாற்காலியை எப்படியாவது பிடித்துவிடும் சித்து என்கிற சித்தராமையாவின் சித்து விளையாட்டு இம்முறையும் வெல்லக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்றது காங்கிரஸ். இதனையடுத்து ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் கடந்த 4 நாட்களாக பெரும் இழுபறி நீடித்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இது தொடர்பாக பெங்களூருவில் தொடங்கிய ஆலோசனை கூட்டங்கள் டெல்லியில் உக்கிரமாக நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது சித்தராமையா முதல்வர்; டிகே சிவகுமார் துணை முதல்வர் என்கிற யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் டிகே சிவகுமார் தமக்கு துணை முதல்வர் பதவியே வேண்டாம்; மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவே இருக்கிறேன் என டிகே சிவகுமார் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் இழுபறி இன்னமும் தொடருகிறது. இருந்த போதும் சித்தராமையா முதல்வராவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது.
யார் இந்த சித்தராமையா? : 1948-ம் ஆண்டு மைசூரு மாவட்டம் குக்கிராமத்தில் சித்தராமே கவுடா- போரம்மா தம்பதியினர் மகனாக பிறந்தவர். குருபா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். மைசூரில் வழக்கறிஞராக பணியாற்றிய பின்னர் பாரதிய லோக் தளம் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
1980களில் ஜனதா கட்சி, கர்நாடகாவில் செல்வாக்கு செலுத்திய காலம். அப்போது 1983-ல் பாரதிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைந்தார். பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார் சித்தராமையா. 1992-ல் ஜனதா கட்சி தேசிய செயலாளராக பதவி வகித்த அவர் 1994-ல் தேவகவுடா அமைச்சரவையில் இடம்பெற்றார். இதன்பின்னர் காலங்கள் மாறத் தொடங்கிவிட்டன.
1996-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக தேவகவுடா பதவியேற்றார். அப்போது கர்நாடகா முதல்வர் பதவி ஜேஎச் பட்டீலுக்கு கிடைத்தது; துணை முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு கிடைத்தது. ஆனால் கருத்து வேறுபாடுகளால் 1999-ல் சித்தராமையாவின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அப்போது ஜனதா தளம் கட்சியும் இரண்டாகப் பிளவுபட்டு தேவகவுடா தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- ஜேடிஎஸ் கட்சி உதயமானது. சித்தராமையான மஜதவில் ஐக்கியமானார். அப்போது மஜத, மாநில தலைவராகவும் பதவி வகித்தார் சித்து.
கர்நாடகாவில் 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தொங்கு சட்டசபை உருவானது. இதனால் காங்கிரஸ்- மஜத இணைந்து புதிய ஆட்சி தரம்சிங் தலைமையில் அமைத்தது. அப்போது சித்தராமையா துணை முதல்வரானார். ஆனால் சித்தராமையாதான் முதல்வராவார் என பலரும் எதிர்பார்த்தனர். தேவகவுடாவோ சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி தர விரும்பாதவராக இருந்தார். இதனால் தேவகவுடா, சித்தராமையா இடையே கருத்து வேறுபாடு உருவானது. 2005-ம் ஆண்டு மஜத கட்சியில் இருந்து சித்தராமையா நீக்கப்பட்டார். இதனையடுத்து அகில இந்திய பிரக்திபாரா ஜனதாதளம் கட்சியை தொடங்கினார் சித்து. ஆனால் இந்த தனிக்கட்சியும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஜோதியில் இணைந்துவிட்டார் சித்தராமையா.

2006-ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதி இடைத்தேர்தலில் 257 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்; 2008-ல் வருணா தொகுதி எம்.எல்.ஏ.வானார். 2013-ம் ஆண்டு தமது கடைசி தேர்தல் இது என அறிவித்து பிரசாரம் செய்தார். அப்போதைய தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தோல்வி அடைந்ததால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி இலகுவாகக் கிடைத்தது. அந்த ஆட்சிக் காலத்தில்தான் சர்ச்சைக்குரிய மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டமும் கொண்டுவரப்பட்டது.
2018-ம் ஆண்டு தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என ஜெயித்தவர் சித்து. தாம் போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்று, பாதாமியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தற்போது வருணா தொகுதியில் மீண்டும் எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார். இந்த தேர்தலும் தமக்கு கடைசி தேர்தல்.. இதுவும் தமக்கு கடைசி முதல்வர் வாய்ப்பு என 10 ஆண்டுகால பல்லவியைப் பாடியே இப்போதும் முதல்வர் பதவியை லவட்டிக் கொண்டு போகிற/ கைப்பற்றுகிறார் சித்தராமையா என்கின்றன கர்நாடகா அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications