மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு காங்கிரஸ் குடைச்சல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோருகிறது!
பெங்களூர்: மத்திய இணை அமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமிக்கு எதிரான கனிம நிறுவன நில முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் கெலாட்டிடம் அனுமதி கோரியுள்ளது. கர்நாடகா மாநில எஸ்ஐடி போலீசார். மூடா நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் குமாரசாமிக்கு எதிராக கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் குடைச்சல் கொடுக்கிறது என்பது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குற்றச்சாட்டு.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மனைவிக்கு மூடா எனும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டு மனைகள் ஒதுக்கிய விவகாரம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்தார். இந்த அனுமதிக்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் திடீரென மத்திய இணை அமைச்சரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமிக்கு எதிரான கனிம நில முறைகேட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். குமாரசாமிக்கு எதிராக 13 ஆண்டுகளுக்கு முன்னர் புயலை கிளப்பியதுதான் இந்த வழக்கு.
2006-2007-ம் ஆண்டு கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவி வகித்த காலத்தில், வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்துக்கு கனிம வள தொழில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் 550 ஏக்கர் நிலமும் அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில்தான் முறைகேடு என்பது வழக்கு. இது தொடர்பான வழக்கை கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு - சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் குமாரசாமிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திடீரென சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆளுநர் கெலாட்டிடம் அனுமதி கோரி இருக்கிறது கர்நாடகா சிஐடி போலீஸ். குமாரசாமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 10 மாதங்களுக்கு முன்னரே அனுமதி கேட்டும் ஆளுநர் தாமதப்படுத்தி வந்தார்; சித்தராமையா வழக்கில் உடனே அனுமதி கொடுத்த ஆளுநர் இப்போது என்ன செய்யப் போகிறார் என்பது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications