கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் நீக்கம்.. ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டறிக்கை!
பெங்களூர்: கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாக ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
சிறையிலிருந்து சசிகலா விடுதலையாவதற்கு முன்னர் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி கொரோனா பாதிப்பால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சிறையிலிருந்து விடுதலையானார்.
இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு கொரோனா தொற்று நீங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவர் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் பெங்களூர் புறநகர் பகுதியில் தேவனஹள்ளி பகுதியில் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சசிகலாவை பார்க்க கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ், அமமுக செயலாளர் சம்பத்துடன் திங்கள்கிழமை அன்று பண்ணை வீட்டுக்கு சென்றார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவை சந்திக்க அனுமதி இல்லாததை அடுத்து அவர்கள் இருவரும் அங்கு சிறிதுநேரம் இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டனர்.
இதன் மூலம் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் யுவராஜை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
காவிரி டெல்டா, கொரோனா தடுப்பு.. மோடியை ராஜ்யசபாவில் புகழ்ந்து தள்ளிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகிறார்.
கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.