37எல்லாம் கிடையாது-10 டிஎம்சி காவிரி நீர்தான் தருவோம்- கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கொக்கரிப்பு!
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரில் 10 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடுவோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா எவ்வளவு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது ஏற்கனவே வரையறை செய்யப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதி செய்துள்ளன. இதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 9-ந் தேதி வரை கர்நாடகா அரசு, காவிரியில் 53 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெறும் 15 டி.எம்.சி. நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டிருந்தது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்திலும் இதனை தமிழ்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். தமிழ்நாட்டுக்கு காவிரியில் தரப்பட வேண்டிய 37.9 டிஎம்சி நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கை ஏற்கப்படாததால் காவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வெளிநடப்பும் செய்தனர்.
காவிரி மேலாண்மை ஆணையமோ, 10 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டால் போதும் என உத்தரவிட்டது. இது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் ஏமாற்றமும் அநீதியுமாகும். இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கான காவிரி நீரின் அளவை கர்நாடகாவை முழுமையாக திறந்துவிடவில்லை. காவிரி ஆணையமும் இதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதனால் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய எஞ்சிய 37.9 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரிடம் காவிரி நீர் திறப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிகே சிவகுமார், தமிழ்நாட்டுக்கு காவிரியில் 10 டிஎம்சி நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டும் விட்டன. கடந்த ஆண்டு அதிகமான மழை இருந்தது. 400 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்தது. அதேநேரத்தில் மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் அந்த வீணான நீர் தடுக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கான நீரை திறந்துவிட்டிருக்கவும் முடியும். ஆகையால்தான் மேகதாது அணைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தர கோருகிறோம் என்றார்.
மேலும் காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவசரமாக மனுத் தாக்கல் செய்திருக்கவும் தேவை இல்லை. பேச்சுவார்த்தைகள் மூலமே காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்போம் என்றார் டிகே சிவகுமார்.
முன்னதாக தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications