காவிரி நீரை இனி தமிழ்நாட்டுக்கு திறந்துவிடாது கர்நாடகா! காவிரி ஆணைய உத்தரவு காலம் இன்றுடன் முடிவு!
பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று வரை மட்டுமே காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிடும். தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் நிலையில் ஈவிரக்கமே இல்லாமல் காவிரி நீரை திறந்துவிட மறுக்கிறது கர்நாடகா.
காவிரி மேலாண்மை ஆணையத்தின்23-வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு (செப்டம்பர் 12 வரை) நாள்தோறும் 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் இந்த உத்தரவை ஏற்கவில்லை. இதனால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்து கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்தது. இதனிடையே கர்நாடகா சொற்ப அளவு காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகா பாஜக, கன்னட அமைப்பினர் பெரும் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் பெரும் பதற்றம் நிலவியது.
மேலும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு சில நாட்களுக்கு முன்னர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 19-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை வினாடிக்கு 37,869 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. அதாவது தமிழ்நாடு கேட்ட நீரை விட கூடுதலாக நீர் தரப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து செப்டம்பர் 12-க்குப் பின் நீரை திறந்துவிட இயலாது. தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறக்க கோருவதை ஏற்க முடியாது. அம்மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
இதனடிப்படையில் இன்றுடன் தமிழ்நாட்டுக்கான சொற்ப அளவான 3,000 கன அடி காவிரி நீரையும் கர்நாடகா திறந்துவிடுவதை நிறுத்திவிடும். இதனால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகள் செய்வதறியாமல் தவித்துப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications