அதான் காங்கிரஸ் ஜெயிச்சிடுச்சுல்ல..200 யூனிட் இலவசம்.. கரண்ட் பில் கட்ட மறுக்கும் கன்னடர்களால் ஷாக்!
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்றுவிட்ட நிலையில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிப்பு வரக் கூடும்; அதனால் மின்சார கட்டணத்தைக் கட்ட முடியாது என பொதுமக்கள் கூறிவருவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை இடம்பெறச் செய்திருந்தன. தமிழ்நாட்டு திமுக பாணியில் காங்கிரஸ் கட்சி ஏராளமான இலவசங்களை அறிவித்தது.

க்ர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்; வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம்; வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 நிதி உதவி; டிப்ளமோ பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500; விவசாய கடன் ரூ3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்; கர்நாடகாவின் KSRTC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி; விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும்; சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும்; ஆழ்கடல் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்; மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ6,000 நிதி உதவி; பால் மானியம் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்வு; மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம்; எஸ்சி இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்துவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வாக்குறுதிகள் பெரும் கவனத்தையும் ஈர்த்தன. தேர்தல் களத்தில் விவாதப் பொருளாகவும் மாறியது.,
தற்போது 135 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிட்டது. கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் இன்று அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பரபர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே இன்று கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளில் மின்கட்டணம் வசூலிக்க சென்ற மின்வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள் கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. அதாவது 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது; தற்போது காங்கிரஸ் ஜெயித்துவிட்டது; அதனால் காங்கிரஸ் அரசு இந்த அறிவிப்பை வெளியிடும்; அதனால்தான் மின்சார கட்டணத்தைக் கட்ட முடியாது என கூறி இருக்கின்றனர். இந்த பதிலால் மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications