லோக்சபா சீட் நோ- முகத்தில் அடித்தது போல சொன்ன டெல்லி-'கவுரவமாக' வேறு மாதிரி அறிவித்த சதானந்த கவுடா!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவுக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர முடியாது என டெல்லி பாஜக மேலிடம் நேரடியாக தெரிவித்ததால் அவர் தேர்தல் அரசியலில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்திருக்கிறார் என்று பகிரங்கப்படுத்தினார் மற்றொரு முன்னாள் முதல்வர் எடியூரப்பா.
கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது 70 வயதை காரணம் காட்டி முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா உள்ளிட்டோருக்கு சீட் தர மறுத்தது டெல்லி மேலிடம். இதனால் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில் ஹாசனில் செய்தியாளர்களை சந்தித்த மற்றொரு முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, தாம் தேர்தல் அரசியலில் இனி பங்கேற்கமாட்டேன். பாஜக கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்துவேன் என்றார். 2019 லோக்சபா தேர்தலில் பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரானார் சதானந்த கவுடா. மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது அவரது பதவி பறிக்கப்பட்டது. 2024 லோக்சபா தேர்தலிலும் போட்டியிடுவதற்காக காய்நகர்த்தி வந்தார் சதானந்த கவுடா. இந்தப் பின்னணியில் திடீரென தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சதானந்த கவுடா அறிவித்தார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், சதானந்த கவுடா தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு 2024 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என மேலிடம் நேரடியாக கூறிவிட்டது. அதனால் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடப் போவது இல்லை. அதே நேரத்தில் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது என்றார்.
கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா கவுடா ஜாதியில் பாஜகவின் முகமாக அறியப்பட்டவர் சதானந்த கவுடா. அவருக்குப் பின்னர் சிடி ரவி உள்ளிட்டோர் அதே ஜாதியில் இருந்து அடுத்த கட்ட தலைவர்களாக உயர்ந்துள்ளனர். தற்போது சதானந்த கவுடாவின் தேர்தல் அரசியல் வாழ்க்கைக்கு பாஜக மேலிடமே முற்றுப்புள்ளி வைத்து வீட்டுக்கும் அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications