"நீ குண்டா இருக்க! உனக்கு குழந்தை பிறக்காது!" மனைவியை கொன்ற மல்யுத்த வீரர்! கர்நாடகாவில் ஷாக்
பெங்களூர்: உடல் பருமனாக இருப்பதால் கர்ப்பமாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி மனைவியை மல்யுத்த வீரர் ஒருவர் கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அழகான மணவாழ்க்கை அமையும் என்று கனவு கண்ட அந்தப் பெண்ணுக்கு, திருமணமான சில மாதங்களிலேயே மரணம் பரிசாகக் கிடைத்துள்ளது. "நீ குண்டாக இருக்கிறாய்" என்று உருவக் கேலி செய்தும், வரதட்சிணை கேட்டும் தாலி கட்டிய கணவனே மனைவியைக் கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா கமலாகர் (29). செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், பசவராஜ் வத்தர் என்பவருக்கும் கடந்த 2024 டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான சில வாரங்களிலேயே பிரியங்காவின் வாழ்க்கை நரகமாக மாறத் தொடங்கியது.
பசவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியங்காவைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. "நீ என்னை விட குண்டாக இருக்கிறாய்", "உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது" என பசவராஜ் அடிக்கடி பிரியங்காவை உருவக் கேலி (Body Shaming) செய்தாராம்.
இதுமட்டுமின்றி, பிரியங்காவின் வீட்டிலிருந்து கூடுதல் பணம் மற்றும் நகைகளை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
பிரியங்காவின் உறவினர்கள் ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு பிரியங்கா இரண்டு முறை கருவுற்றதாகவும், ஆனால் கணவன் பசவராஜ் அவரைத் தொடர்ந்து தாக்கியதால் இரண்டு முறையும் கருக்கலைப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
"அவள் குண்டாக இருக்கிறாள், அவளுக்குக் குழந்தை பிறக்காது என்று சொல்லியே அவர் அவளை அடித்துக் கொடுமைப்படுத்தினார்" என்று பிரியங்காவின் மாமா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கொடுமையின் உச்சமாக, கடந்த திங்கட்கிழமை இரவு நவல்குந்த் தாலுகாவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து, பிரியங்காவை பசவராஜ் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது. இது அந்த கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் புகார் அளித்த பிரியங்காவின் குடும்பத்தினர், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நவல்குந்த் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கணவன் பசவராஜ் வத்தர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ரேணவ்வா, சுபாஷ், சித்தராமேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.
உருவக் கேலியும் வரதட்சணை ஆசையும் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்துள்ள இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும் குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் வரம். அது கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டுமே தவிர பரஸ்பரம் இருவரும் மாறி மாறி புகார் கூறிக் கொள்வது திருமண பந்தத்தில் ஏற்புடையதல்ல.
எல்லா செல்வங்களும் கிடைத்திருந்தாலும் ஒருவரை உருவக்கேலி செய்வது என்பது கீழ்த்தரமான விஷயமாகும். இதை ஒரு போதும் கிண்டலுக்காக, ஜாலிக்காக, காமெடிக்காக, செல்லமாக என கூறுவதை ஏற்க முடியாது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. பசவராஜுக்கு கவுன்சலிங் கொடுத்திருந்தால் ஒரு வேளை அவர் சரியாகி மனைவியும், குழந்தை பிறப்புக்கான தாமதத்தையும் கண்டறிந்திருப்பாரோ என்னவோ?












Click it and Unblock the Notifications