கேரள லாட்டரி சீட்டுல மெக்கானிக்குக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்ததே! ஆனா கைக்கு இவ்ளோ கம்மிதான் வருமாம்
பெங்களூர்: கேரள லாட்டரி சீட்டு வாங்கிய கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியைச் சேர்ந்த அல்தாப் பாஷா என்பவருகு 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் பல வருடங்களாக லாட்டரி சீட்டுகள் வாங்கி நஷ்டம் அடைந்து வந்த அவருக்கு, வயநாடு சென்று வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது. இது கடவுள் கொடுத்த பரிசு என குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை பார்ப்போம்..
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா டவுன் பகுதியில் வசித்து வரும் அல்தாப் பாஷா என்பவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஆவார். இவர் அண்மையில் வயநாடு சென்றுள்ளார். அங்கு இவர் ரூ.500 கொடுத்து கேரள லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார். தற்போது அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி பரிசு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒரே நாள் இரவில் அவர் கோடீஸ்வரராகிவிட்டார். ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆனதால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து அல்தாப் பாஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " உண்மையிலேயே எனக்கு 25 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என்று நான் சுத்ததமாக நம்பவே இல்லை.. நான் இப்போது இல்லை.. கடந்த 15 வருடங்களாகவே லாட்டரி சீட்டுகள் வாங்கி வருகிறேன். கர்நாடகா மாநிலத்தில் விற்பனையாகும் லாட்டரி சீட்டுகளை பல முறை வாங்கி உள்ளேன். ஆனால் ஒரு முறை கூட அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.. அவற்றை வாங்கி நீண்ட நாட்களாக நஷ்டம் அடைந்திருந்தேன். கேரளாவில் எனக்கு உறவினர்களும், நண்பர்களும் உள்ளனர். அவர்களை பார்க்க அண்மையில் சென்றேன். அப்போது இந்த லாட்டரி சீட்டை வாங்கி இருந்தேன்.

ஆனால் நான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் வீட்டில் உள்ளவர்களே முதலில் இதனை நம்பவில்லை. ஆன்லைனில் பார்த்த பிறகே அவர்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. இந்த பணத்தின் மூலம் எனது மகளின் திருமணத்தை கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் நான் நடத்துவேன். ஒரு வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறேன். மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யவும் திட்டமிட்டுள்ளேன்" இவ்வாறு கூறினார்.
இதுபற்றி அல்தாப் பாஷாவின் மனைவி சீமா பானு, மகள் தானிஷா பாத்திமா ஆகியோர் கூறும் போது, 'இதை எங்களால் முற்றிலும் நம்ப முடியவில்லை. இது எங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசாக பார்க்கிறோம். லாட்டரி சீட்டு வாங்குவதால் எங்கள் வீட்டில் தகராறு தான் பல முறை வந்துள்ளோம் லாட்டரி சீட்டை வாங்க வேண்டாம் என்றும் கூறி வந்தோம். தற்போது ரூ.25 கோடி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது"இவ்வாறு கூறினார்கள்.
மாண்டியாவைச் சேர்ந்தமோட்டார் சைக்கிள் மெக்கானிக் அல்தாப்பிற்கு, கேரள லாட்டரியில் விழுந்த 25 கோடி பரிசு தொகையில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? அவருக்கு விழுந்தது 25 கோடி பரிசு என்றாலும், வரியாக 12.11 கோடி கழித்துக் கொள்ளப்படும். மீதமுள்ள 12.88 கோடி ரூபாய் அல்தபாக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 வருடங்களாக லாட்டரி வாங்கி ஏமாந்த வந்தவருக்கு இப்போது தான் பெரிய பரிசு விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications