இனி அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம்.. அரசு போட்ட அதிரடி உத்தரவு.. பின்னணி
பெங்களூர்: ‛‛ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையில் அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடைகளை அணிந்து தான் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்'' என்று கர்நாடகா அரசு அம்மாநில அரசு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் உள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கர்நாடகா அரசு உத்தரவு
இந்த குடியரசு தினவிழாவையொட்டி அரசு ஊழியர்களுக்கு என்று கர்நாடகா அரசு பிரத்யேகமான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இனி, அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று கதர் ஆடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்ட உணர்வையும், பொது சேவையையும் மீண்டும் இணைக்கும் நோக்கில் கதர் ஆடைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
முதல் மாத சனிக்கிழமையில்..
மாதத்தின் முதல் சனிக்கிழமை மட்டுமல்லாமல், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தானாக முன்வந்து கதர் ஆடைகளை அணிய தங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களை மூத்த அதிகாரிகள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு கேட்டு கொள்கிறது.
பெருமையின் அடையாளம்
மாநில அரசு அதிகாரிகள் கதரை வெறும் துணியாக மட்டுமல்லாமல், நாட்டின் மரியாதை மற்றும் பெருமையின் அடையாளமாகப் பார்க்க வேண்டும். இந்த முயற்சி உள்நாட்டு பொருட்களின் மதிப்பை வளர்த்து இந்திய அடையாளம் மற்றும் சுயமரியாதையை மேம்படுத்தும்.
அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் மத்தியில் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அரசு நம்புகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
நெசவாலர்களுக்கு உதவி
இதுபற்றி அரசு அதிகாரிகள் கூறுகையில், ‛‛ கதர் உற்பத்தி என்பது கிராம பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நிச்சயம் உதவும்'' என்றனர். கர்நாடகா அரசின் இந்த திட்டத்துக்கு கதர் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications