"பேக்கில் பீப் சத்தம் வருது!" கொரிய பெண்ணிடம் அத்துமீறிய ஊழியர்.. பெங்களூர் ஏர்போர்ட்டில் பயங்கரம்
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தென் கொரியப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நமது நாட்டில் அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெங்களூர் ஏர்போர்ட்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது. அதிலும் எப்போதுமே உச்சபட்சப் பாதுகாப்பு இருக்கும் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு தாய் நாட்டிற்குச் செல்லவிருந்த கொரியப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெங்களூர் ஏர்போர்ட்டில் கிரவுண்ட் பணியாளராக வேலை செய்த முகமது அஃபான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரியப் பெண்ணை சோதனை செய்ய வேண்டும் எனச் சொல்லி அவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.. கடந்த ஜனவரி 19ம் தேதி இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
என்ன நடந்தது
அந்தப் பெண் கடந்த திங்கள்கிழமை பெங்களூர் ஏர்போர்ட் சென்றுள்ளார். குடியேற்றச் சோதனைகளை முடித்துவிட்டு, விமானம் இருக்கும் முனையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை முகமது அஃபான் அணுகி விமான டிக்கெட்டை காட்டுமாறு சொல்லி இருக்கிறார். கொரியப் பெண்ணின் செக்-இன் லக்கேஜ்ஜில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும், அதில் இருந்து பீப் சத்தம் வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.
பாலியல் சீண்டல்
மேலும், அந்தப் பெண்ணிடம், "வழக்கமான பரிசோதனைக்காகக் கவுண்டருக்கு சென்றால் லேட் ஆகும்.. இதனால் விமானத்தை கூட தவறவிட வாய்ப்பு இருக்கிறது" என்று அஃபான் சொல்லி இருக்கிறான். இருப்பினும், முழுமையாகச் சோதனை நடத்த வேண்டும் என்பதால் ஆண்கள் கழிப்பறைக்கு அருகில் அழைத்துச் சென்றிருக்கிறான். அந்தப் பெண் ஆட்சேபணை தெரிவித்த போதிலும், அதைத் தாண்டி அஃபான் தகாத முறையில் தொட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் எதிர்க்க ஆரம்பித்தவுடன், சோதனை முடிந்துவிட்டது என சொல்லி, கட்டிப்பிடித்து "நன்றி" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
நடவடிக்கை
இது தொடர்பாக அந்தப் பெண் உடனடியாக விமான நிலையப் பாதுகாப்புப் படையினரிடம் புகாரளித்தார். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பாதுகாப்புப் படையினர், அஃபானை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஃபானின் அத்துமீறி நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
கொரியப் பெண்ணின் புகாரின் பேரில், விமான நிலையக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அஃபானைக் கைது செய்தனர். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த அஃபான் ஏர் இந்தியா SATSஇல் பணிபுரிகிறார். இது ஏர் இந்தியா விமானங்களுக்கு இது தரை மற்றும் சரக்கு சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
பொதுவாகவே விமான நிலையத்தில் உச்சபட்சப் பாதுகாப்பு இருக்கும். கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications