ஓட்டுக்கு பணம்! ரூ.3,000 கூப்பன் கொடுத்த காங்கிரஸ்? தோற்றுப்போன குமாரசாமி மகன் நிகில் பரபர புகார்
பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் மாஜி முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் நள்ளிரவில் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் கொடுத்து ஓட்டை வாங்கியதாக பரபரப்பாகவும், உருக்கமாகவும் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். தொங்கு சட்டசபை உருவாகும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் அதனை மீறி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது மகன் நிகில் கவுடா ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் குமாரசாமியின் மனைவியும், தனக்கு தாயுமான அனிதா எம்எல்ஏவாக இருந்த நிலையில் நிகில் கவுடா தோல்வியை தழுவினார்.
இந்த தொகுதியில் நிகில் 76,975 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன் 87,690 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிகிலுக்கு இந்த தேர்தலிலும் தோல்வி கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் தனது தோல்விக்கான காரணம் குறித்த நிகில் கவுடா கூறியுள்ளார். சென்னப்பட்டணா தொகுதியில் தந்தை குமாரசாமி வெற்றி பெற்ற நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அதில் நிகில் கவுடா கூறியதாவது:
ராமநகர் மாவட்டத்தில் சென்னப்பட்டணாவில் என் அப்பா மீது அதிகமானவர்கள் பிரியம் வைத்துள்ளனர். உங்களின் அன்பை கண்டு வியக்கிறேன். ராமநகர் தொகுதியில் நான் தோற்றிருந்தாலும் கூட என் மீது மக்கள் பாசம் காட்டினர். இந்த அன்புக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். நீங்கள் தான் எங்களின் குடும்பம்.
தேர்தல் வெற்றி தோல்வி ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. இதனால் வீட்டில் முடங்கி இருக்க மாட்டேன். கடந்த 2004ல் ராமநகர் தொகுதியில் அப்பா குமாரசாமி போட்டியிட்டார். அதன்பிறகு தொடர்ந்து ராமநகர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வருகிறார். மண்டியாவில் என்னை கடந்த முறை தோற்கடித்தனர். இப்போது ராமநகரில் தோற்கடித்துள்ளனர். நள்ளிரவில் காங்கிரஸ் கட்சியின் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடம் வழங்கி அவர்களை ஏமாற்றி என்னை தோற்கடித்துள்ளனர்.
வரும் நாட்களில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள். மேலும் நான் எந்த காரணத்தை கொண்டும் ராமநகரை விட்டு வெளியேற மாட்டேன். மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன். தற்போதைய சூழலில் எதிர்கால அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எனது தாத்தா தேவகவுடா உருவாக்கி தந்தை குமாரசாமி வளர்த்த கட்சியை பலப்படுத்துவது பற்றி யோசித்து வருகிறேன். 2028 ல் ராமநகர் சட்டசபை தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications