கர்நாடகாவில் கன்னடம் படி..இல்லை எனில் வெளியேறு- தமிழர் உள்ளிட்டோருக்கு வாட்டாள் நாகராஜ் மிரட்டல்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் தமிழர் உள்ளிட்ட பிற மாநிலத்தவர் கன்னட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும்; கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்திய மராத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொகுதி மறுசீரமைப்பபு விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் கூட்டத்தை கர்நாடகா அரசு புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வரும் 22-ந் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவின் எல்லையான பெலகாவியில் அண்மையில் கன்னட மொழி நடத்துநர், ஓட்டுநரை மராத்தி மொழி பேசுவோர் தாக்கினர்; இதற்கு பதிலடியாக மராத்தி மொழி பேசும் ஓட்டுநர்- நடத்துநர் தாக்கப்பட்டனர். இதனால் இரு மாநிலங்களிடையே எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனையில் மராத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வரும் 22-ந் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வாட்டாள் நாகராஜ் கூறுகையில், கன்னடர்களைத் தாக்கிய மராத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 22-ந் தேதி கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் மாநிலங்களின் கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அத்துடன் கர்நாடகாவில் வசிக்கும் அனைத்து பிற மொழியினரும் கட்டாயம் கன்னட மொழியை படித்தாக வேண்டும்; அப்படி கன்னட மொழியை படிக்க மறுக்கும் தமிழர் உள்ளிட்ட பிற மொழியினர் கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும் என்றார் வாட்டாள் நாகராஜ்.
வாட்டாள் நாகராஜ் யார்?
கர்நாடகாவில் கன்னட இனவெறியைத் தூண்டும் வகையிலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துவது வாட்டாள் நாகராஜின் வாடிக்கை. குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களை அடிக்கடி நடத்துபவர். தமிழக எல்லை பகுதிகளில் போராட்டம் நடத்தி அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்குகிறவர்.












Click it and Unblock the Notifications