சோனியா + ராகுல் காந்தி.. கர்நாடகா முதல்வர் விவகாரத்தை தீர்ப்பது எப்படி? கார்கே சொன்ன தகவல்
டெல்லி: கர்நாடகாவில் முதல்வர் பதவியை பிடிக்க துணை முதல்வர் டிகே சிவக்குமார் முயன்று வருகிறார். அதேவேளையில் முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையா காய் நகர்த்தி வருகிறார். கர்நாடகா அரசியலில் பெரும் பிரளயத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து மவுனமாக இருந்து வரும் நிலையில் முதல் முறையாக மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி பிரச்சனையை தீர்க்க சோனியா காந்தி, ராகுல் காந்தி களமிறங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவியது. இறுதியாக முதல்வர் பதவியை சித்தராமையா பெற்றார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியோடு சேர்த்து துணை முதல்வர் பொறுப்பு டிகே சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த வேளையில் இன்னொரு தகவல் வெளியானது. முதல்வர் பதவி தொடர்பாக இருதலைவர்கள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருப்பார். அதன்பிறகு அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வராக இருப்பார் என்ற ஒரு தகவல் பரவ தொடங்கியது. ஆனால் இதுபற்றி சித்தராமையா, டிகே சிவக்குமார் அல்லது காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதனால் அந்த கருத்தை சித்தராமையா தரப்பினர் யூகம் என்றும், டிகே சிவக்குமாரின் தரப்பினர் உண்மை என்றும் கூறி வருகின்றனர். தற்போது இரண்டரை ஆண்டுகாலம் சித்தராமையா முதல்வராக நிறைவு செய்துவிட்டார். இதனால் ஒப்பந்த அடிப்படையில் முதல்வர் பதவியை டிகே சிவக்குமாரிடம் வழங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிகே சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசி உள்னர். டிகே சிவக்குமாருக்கு முதல்வர் தவி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அதேபோல் சித்தராமையாவும், மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து அரசியல் சூழல் பற்றி விளக்கி உள்ளார். இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து அமைதி காத்து வந்தது. கடந்த ஒருவாரமாக எந்த கருத்தையும் காங்கிரஸ் மேலிடம் தெரிவிக்கவில்லை. இப்படியான சூழலில் தான் நேற்று முதல் முறையாக மல்லிகார்ஜூன கார்கே வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர், ‛‛கர்நாடகா பிரச்சனையை சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் சேர்ந்து நான் தீர்த்து வைப்பேன். இதுதொடர்பாக நாங்கள் அனைவரும் அமர்ந்துபேசி முடிவு எடுப்போம். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்போம்'' என்று கூறினார்.
கர்நாடகா முதல்வர் விவகாரத்தில் டிசம்பர் 1ம் தேதிக்குள் காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக விரைவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் மல்லிகார்ஜூன கார்கே சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications