மங்களூர் மர்டர்.. ரவுடியை இந்துத்துவா தலைவர் என உரிமை கோரிய பாஜக! சித்தராமையா கொடுத்த நச் பதில்
பெங்களூர்: கர்நாடகாவின் மங்களூரில் இந்துத்துவா செயற்பாட்டாளர் சூஹாஸ் ஷெட்டியின் கொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கள் அமைப்பினர் குறி வைக்கப்பட்டுகிறார்கள் என்று இந்துத்துவாவினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், கொலைவுண்டவர் ரவுடி எனவும், கொலை பழிவாங்கும் நோக்கத்தில் நடந்திருக்கிறது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இந்த கொலை காரணமாக மங்களூரில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நேற்றிரவு சுமார் 8.30 மணிக்கு மங்களூர் அருகே கண்ணிகம்பளா பகுதியில் இந்த கொலை நடந்திருக்கிறது. சூஹாஸ் தனது நண்பர்களுடன் சென்றுக்கொண்டிருந்தார். அவரது காரை ஒரு ஷிப்ட் காரும், பிக்கப் டிரக்கும் பின் தொடர்ந்து வந்திருக்கிறது. கண்ணிகம்பளா பகுதியில் சூஹாஸின் கார் வந்தவுடன் ஷிப்ட் கார் அதை மறித்துள்ளது. பின்னால் வந்த பிக்கப் டிரக், சூஹாஸ் ஷெட்டியின் கார் எஸ்கேப் ஆகாதவாறு தடுத்திருக்கிறது.
பின்னர் 5-6 பேர் கொண்ட கும்பல் சூஹாஸ் ஷெட்டியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சூஹாஸ் ஷெட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். கொலை சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதுபற்றி காவல்துறை ஆணையாளர் அனுபம் அகர்வால் கூறுகையில், "கடந்த 2022ம் ஆண்டு மொஹம்மத் ஃபாஸில் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சூஹாஸ் ஷெட்டி இருந்திருக்கிறார். தாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
ஆனால் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர், தாக்குதல் திட்டமிடப்பட்டது என்றும் இந்துத்துவா அமைப்பினர் குறி வைக்கப்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். பஜரங் தள் இந்த கொலையை கண்டித்து மங்களூரில் பந்த் நடத்தியிருக்கிறது. கொல்லப்பட்ட சூஹாஸின் குடும்பத்தினரை சந்தித்த பாஜகவினர், ஆறுதல் தெரிவித்திருக்கின்றனர். மட்டுமல்லாது அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், "சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த ஆட்சியில் ஜிஹாதி பிரிவுகள் துணிச்சலுடன் செயல்படுகின்றன. இந்த அரசு மீது இந்து அமைப்புகளுக்கு நம்பிக்கை இல்லை" என்று கூறியுள்ளார். அதேபோல சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர். அசோக் கூறுகையில்,
"கொல்லப்பட்ட சூஹாஸுக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதை போலீஸ் ஆணையரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனாலும் சூஹாஸின் பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கொலையில் அரசும், போலீஸும் துணையாக இருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது. 2013ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது 36 இந்து ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்" என்று விமர்சித்துள்ளார்.
கொலை, அதை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பதற்றம், அதையடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் என எல்லாம் சேர்ந்து கர்நாடாக அரசு மீது அழுத்தத்தை ஏற்பட்டுத்தியிருக்கிறது. எனவே முதல்வர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார். அதில், "கொல்லப்பட்ட சூஹாஸ் குற்றப்பின்னணி கொண்டவர். அவர் ஒரு ரவுடியும் கூட. என்ன இருப்பினும் மனித உயிர் முக்கியம். எனவே உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.
இதில் விஷயம் என்னவெனில் சூஹாஸ் மரணத்திற்கு பாஜக களத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் பஹல்காமில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்த இடத்திற்கு பிரதமர் மோடி போகவில்லையே ஏன்? பாஜக ஏன் அதைப்பற்றி பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications