ஸ்தம்பித்த பெங்களூர்! "1 கிமீ கடக்கவே 2 மணி நேரம்.." ஸ்கூல் குழந்தைகள் வீடு திரும்பவே நள்ளிரவு ஆச்சு
பெங்களூர்: தொடர் விடுமுறையால் பொதுமக்கள் சொந்த ஊர் திரும்பியதால், கர்நாடக தலைநகர் பெங்களூரில் நேற்று மிகப் பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஒரு கிமீ தாண்டவே பலருக்கும் இரண்டு மணி நேரம் வரை ஆகியுள்ளது.
காவிரி நதிநீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் கர்நாடகாவில் பந்த் நடத்தப்படுகிறது. இத்துடன் தொடர் விடுமுறையும் வரும் நிலையில், பெங்களூரில் இருந்து நேற்று பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

இதனால் பெங்களூரில் பல்வேறு இடங்களிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் மிகக் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகரித்ததால் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் திடீரென அதிகரித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர் விடுமுறை: இன்று முதல் 5 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்கள். இன்று மிலாதுன் நபி காரணமாக விடுமுறை நாளாகும். அதேபோல நாளை, செப்டம்பர் 29, காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாகக் கர்நாடகா முழுக்க பந்த் நடத்தப்படுகிறது. அதன் பிறகு சனி, ஞாயிறு நாட்கள் வழக்கமான வார விடுமுறைதான். தொடர்ந்து அக். 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் காரணமாகத் தேசிய விடுமுறை.
இப்படி தொடர்ச்சியாகப் பல நாட்கள் விடுமுறை வருவதால் பலரும் பெங்களூரில் இருந்து சொந்த ஊர் திரும்பத் தொடங்கினர். அவுட்டர் ரிங் ரோடு (ORR) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று புதன்கிழமை மாலை வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பெங்களூரு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரட்டிப்பான வாகனங்கள்: பெங்களூரில் இப்படி திடீரென போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் வழக்கத்தை விடப் போக்குவரத்து இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. பொதுவாக, புதன்கிழமைகளில் வாகனங்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை இருக்கும். ஆனால், நேற்றைய தினம் வாகனங்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மழையினால் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியதும் போக்குவரத்தை மோசமாக்கியது.
இந்த கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகத்தில் உள்ளோர் இரவு 9 மணிக்கு முன் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று எக்ஸ் பக்கத்தில் பலரும் வலியுறுத்தினர். மேலும், அவுட்டர் ரிங் சாலை, மாரத்தஹள்ளி, சர்ஜாபுரா மற்றும் சில்க்போர்டு சாலை பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.
கடும் சிரமம்: வெறும் ஒரு கிலோமீட்டரைக் கடக்கவே இரண்டு மணி நேரம் ஆனதாக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டுள்ளனர். பல இடங்களில் பள்ளி வாகனங்களும் இந்த மோசமான டிராபிக்கில் மாட்டிக் கொண்டது. இதனால் குழந்தைகள் வீடு திரும்பவே இரவு 8 மணி ஆனதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். சில இடங்களில் மேலும் தாமதம் ஆனதாகச் சிலர் பதிவிட்டுள்ளனர். மற்றொருவர் தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பவே 5 மணி நேரம் ஆனதாகவும் டிராபிக் அந்தளவுக்கு மோசமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இப்படி பலரும் தாங்கள் பெங்களூர் டிராபிக்கால் பட்ட சிரமத்தைப் பதிவிட்டுள்ளனர். மாரத்தஹள்ளி அருகே டிராபிக் உச்சத்தில் இருந்த நிலையில், வாகனங்கள் சாலையின் இரு பக்கமும் ஊர்ந்தே சென்றன.. பெங்களூரில் தொடர்ந்து டிராபிக் இப்படி அதிகரித்தே வரும் நிலையில், மெட்ரோ மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்றும் பலரும் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications