மோசடி மன்னன் மன்சூர் கானின் "ஷாக்" வீடியோ.. விமான நிலையத்தில் மடக்கப்பட்ட ரோஷன் பெய்க் விடுவிப்பு
Recommended Video
பெங்களூர்: பணமோசடி புகாரில் கைதான ரோஷன் பெய்க் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் ஜூலை 19-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்நாடகத்தில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா உள்ளிட்டவை இல்லாததால் அதிருப்தி அடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் குமாரசாமி நடத்தவுள்ளார்.
இந்த நிலையில் சிவாஜிநகர் தொகுதியின் எம்எல்ஏவும் அதிருப்தி எம்எல்ஏவுமான ரோஷன் பெய்க் சிறப்பு விசாரணைக் குழு போலீஸாரால் நேற்று இரவு பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பணம்
கர்நாடகத்தை சேர்ந்த மன்சூர் கான் என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினார். அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பலன் போன்ற கவர்ச்சியான விளம்பரங்களை அளித்தார். இதை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் செலுத்தினர்.

சம்மன்
இந்த நிலையில் முதலீடாக பெற்ற ரூ. 1600 கோடியுடன் மன்சூர் கான் தலைமறைவாகிவிட்டார். அப்போது அவர் தற்கொலை மிரட்டல் விடுத்து அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை கடந்த ஜூன் 24-ஆம் தேதி ஆஜராகுமாறு மன்சூர் கானுக்கு சம்மன் அனுப்பியது. எனினும் அவர் ஆஜராகவில்லை.

900 கோடி லஞ்சம்
முன்னதாக ஒரு வீடியோ வெளியிட்ட அவர் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டார். அதில் இந்த மோசடியில் பெரும் புள்ளிகளும் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த அவர் அதிகாரிகளுக்கு 900 கோடி ரூபாய் லஞ்சமாகவே கொடுத்துள்ளேன். இந்த மோசடியில் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிற்கும் தொடர்புண்டு என வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்த புகாரை ரோஷன் மறுத்திருந்தார்.
மன்சூர் கான்
இந்த நிலையில் மன்சூர் கான் நேற்றைய தினம் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் நான் 24 மணி நேரத்தில் இந்தியா திரும்புவேன். இந்திய நீதித் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்தியாவை விட்டு நான் போனது பெரிய தவறு. என்னுடைய குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என அந்த வீடியோவில் மன்சூர் கான் தெரிவித்திருந்தார்.
|
அதிகாரிகள்
இந்த நிலையில் பெங்களூர் விமான நிலையத்திற்கு ரோஷன் பெய்க் வந்த தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸார் நேற்று இரவு பெய்க்கை கைது செய்தனர். இதையடுத்து இன்று அவரிடம் எஸ்ஐடி குழுவினர் விசாரணை நடத்திவிட்டு அவரை விடுவித்தனர். மேலும் வரும் 19-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு போலீஸார், பெய்க்குக்கு அறிவுறுத்தியுள்ளனர். மன்சூர் கான் விரைவில் இந்தியா திரும்புவேன் என வீடியோ வெளியிட்டதால் ரோஷன் எங்காவது தப்பி செல்ல முயன்றாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.

பெய்க் கைது
ரோஷன் பெய்க் பாஜகவுடன் சேர்ந்து இந்த ராஜினாமா நாடகத்தை நடத்தியதாகவும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மிரட்டுவதாகவும் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில் தற்போது பெய்க் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications