வேணாம் ராஜினாமா பண்ணாதீங்க.. பேசி பார்த்து டென்ஷனான கர்நாடக அமைச்சர் செய்த அதிர்ச்சி செயல்
பெங்ளூரு: கர்நாடகத்தில் உச்சகட்ட அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் டி.கே.சிவகுமார் எம்எல்ஏ-க்கள் சிலரின் ராஜினாமா கடிதங்களை கிழித்தெறிந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்தது முதலே எனக்கு ஏன் அமைச்சர் பதவி இல்லை, அவருக்கு ஏன் பதவி தரப்பட்டது என்ற பஞ்சாயத்தே நடைபெற்று வருகிறது.
முதல்வர் குமாரசாமியும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து, கர்நாடக அரசு என்னும் வண்டியை ஓட்டி வருகிறார். எனினும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, கடந்த ஆட்சியின் போதே ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்து கூட்டணி அரசை கவிழ்க்க பார்த்தது. எனினும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் தற்போது முன்பை விட அதிக பலத்துடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ள பாஜக, கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது கூட்டணி அரசை சேர்ந்த 12 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினமா செய்ய முடிவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் தங்களது ராஜினாமா கடிதத்தை அளிக்க கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் அலுவலகத்திற்கு இன்று மதியம் சென்றுள்ளனர். இதனையறிந்த மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவருமான சிவகுமார் சபாநாயகர் அறைக்கு விரைந்து சென்று எம்எல்ஏ-க்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
ஆனால் அவரது பேச்சை செவி கொடுத்து கேட்க தயாராக இல்லாத எம்எல்ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாா செய்வதில் குறியாக இருந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அமைச்சர் சிவகுமார், எம்எல்ஏ-க்கள் கையில் இருந்த ராஜினாமா கடிதத்தை பிடுங்கி கிழித்தெறிந்துள்ளார்.
அப்போது ஆவேசமாக அவர்களிடம் கத்திய சிவகுமார், பதவியை விட்டு விலகுவதாக நீங்கள் கூறும் காரணம் துளியும் ஏற்புடையதல்ல என உணர்ச்சிவசப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சிவகுமார் எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை நான் ஏன் கிழித்தெறிய கூடாது என வினவினார். இதற்காக அவர்கள் என் மீது புகார் அளிக்கட்டும், அவர்கள் என்னை சிறையிலடைக்க விரும்பினால், நான் தயாராக உள்ளேன். நான் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கான செயலை செய்துள்ளேன் என எனக்கு தெரிகிறது என்றார்.