முடிவுக்கு வந்த முடா வழக்கு.. லோக் ஆயுக்தா அறிக்கையை ஏற்றது நீதிமன்றம்! சித்தராமையா விடுவிப்பு
பெங்களூர்: ரூ.56 கோடி மதிப்பிலான 14 வீட்டுமனைகளை வாங்கிய வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட 4 பேரை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது.
பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் மீதான மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (முடா) வழக்கில் லோக் ஆயுக்தா காவல்துறை தாக்கல் செய்த, குற்றமற்றவர் எனும் அறிக்கையை ஏற்றுக்கொண்டது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், திறந்த நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால், சித்தராமையா, அவரது மனைவி பி.எம். பார்வதி, அவரது மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் நில உரிமையாளர் ஜே. தேவராஜ் ஆகிய நான்கு பேர் மீதான குற்ற நிராகரிப்பு அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இவ்வழக்கில் உள்ள இதர குற்றவாளிகள் மீதான விசாரணை தொடரும் என்றும், விசாரணையை முழுமையாக முடித்து இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் புலனாய்வு அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சித்தாமையா தனது அதிகாரப்பூர்வ பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அவரது மனைவி பி.எம்.பார்வதிக்கு சில நிலங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதான் முடா வழக்கின் பின்னணியாகும். சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணன் என்பவர், இழப்பீட்டு நிலங்களை வழங்குவதில் நியமன நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி முறைகேடுகள் குறித்து புகார் அளித்ததை அடுத்து இந்த சர்ச்சை எழுந்தது.
கடந்த 2024ம் அண்டு செப்டம்பர் மாதம், கர்நாடக ஆளுநர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, சகோதரர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் நில உரிமையாளர் ஜே. தேவராஜ் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு சிறப்பு நீதிமன்றம் லோக் ஆயுக்தா காவல்துறைக்கு உத்தரவிட்டது.
லோக் ஆயுக்தா காவல்துறை இந்த வழக்கை விசாரித்து, கடந்த பிப்ரவரியில் குற்ற நிராகரிப்பு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேம்பாட்ட ஆணைய ஒதுக்கீடுகளில் நடந்த இதர முறைகேடுகள் குறித்து மேலதிக விசாரணை நடத்த இந்த அறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புலனாய்வு அதிகாரிக்கு சீலிடப்பட்ட கவரில் வைக்கப்பட்டிருந்த சிடி கோப்புகள் மற்றும் இறுதி அறிக்கை வரைவினை உரிய சரிபார்ப்புக்குப் பிறகு திருப்பித் தருமாறு நீதிமன்றம் தனது பதிவாளர்களுக்கு உத்தரவிட்டது.
மேலும், புலனாய்வு அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கக் கோரி புகார்தாரர் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. அமலாக்கத் துறை இந்த வழக்கில் ஒரு பாதிக்கப்பட்ட தரப்பாக வரையறுக்கப்பட்ட முறையில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 9 அன்று நடைபெறும், அப்போது எஞ்சிய குற்றவாளிகள் மீதான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications