மனைவிக்கு 14 மனைகள்.. லோக் ஆயுக்தாவில் தப்பிய சித்தராமையா... மிரட்டும் அமலாக்கத்துறை வழக்கு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மீதான முடா வீட்டு மனை முறைகேடுகள் வழக்கில் ஆதாரம் இல்லை என லோக் ஆயுக்தா தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லோக் ஆயுக்தாவிடம் இருந்து சித்தராமையாவும் அவரது மனைவியும் விடுதலை பெற்றாலும் இந்த முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கு நிலுவையில் இருப்பது அவரது ஆதரவாளர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் என்பதுதான் முடா. இந்த முடா நிறுவனமானது முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த 14 வீட்டு மனைகளும் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. ஆனால் 14 வீட்டு மனைகளும், பார்வதியின் நிலத்தை முடா நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததால் தரப்பட்ட நட்ட ஈடு என்றது சித்தராமையா தரப்பு.

இது தொடர்பாக கர்நாடகா ஆளுநரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா ஆளுநர் அனுமதி அளித்ததால் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரித்தது.
இந்த நிலையில் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சினேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்தா அமைப்பு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், சித்தராமையா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான வீட்டு மனை முறைகேடுகளுக்கு எந்த ஆதாரமும் சாட்சியமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதனையே இறுதி அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாகவும் லோக் ஆயுக்தா அமைப்பு தெரிவித்திருந்தது.
இதனால் முடா வீட்டு மனை முறைகேடு தொடர்பான லோக் ஆயுக்தா வழக்கில் இருந்து சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் தப்பி இருக்கின்றனர். இது சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.
ஆனால் இதே முடா வீட்டு மனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முடா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது என்பது அமலாக்கத்துறையின் வழக்கு. லோக் ஆயுக்தாவிடம் இருந்து விடுதலை பெற்றாலும் அமலாக்கத்துறை அடுத்ததாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்கிற பதற்றத்தில் இருக்கிறது கர்நாடகா முதல்வர் சித்தராமையா தரப்பு.












Click it and Unblock the Notifications