டிஜிட்டல் முறை தானே.. ஓட்டு எண்ண 2 நாள் வேணுமா? வாய்விட்டு வாங்கி கட்டிய விஷால் பட நடிகர் உபேந்திரா!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மே 10ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில் தான் இது டிஜிட்டல் ஓட்டுப்பதிவு தானே? ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கைக்கு இடையே 2 நாள் அவகாசம் தேவையா? என சந்தேகம் கிளப்பிய நடிகர் விஷால் நடித்த ‛சத்யம்' திரைப்படத்தின் நடிகர் உபேந்திராவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்நிலையில் கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி ஏப்ரல் 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடக்கும். ஏப்ரல் 21ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நிலையில் மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24 கடைசி நாளாகும். அதன்பிறகு மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தி மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

‛சத்யம்’ திரைப்பட நடிகர்
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடிகர் விஷாலின் ‛சத்யம்' படத்தில் நடித்த கன்னட நடிகர் உபேந்திரா கூறிய கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியது. இவர் கர்நாடகாவில் உத்தம பிரஜாக்கியா கட்சியை நடத்தி வருகிறார். கடந்த 2018 தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி தோல்வியை சந்தித்தது.

ஓட்டு எண்ணிக்கைக்கு 2 நாள் தேவையா?
இந்நிலையில் தான் நேற்று கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உபேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கர்நாடகத்துக்கு ஒரே கட்டமாக மே 10ம் தேதி புதன்கிழமை சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால் மே 13 சனிக்கிழமை தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையே 2 நாட்கள் தேவைதானா?'' என கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது ஓட்டு எண்ணிக்கை ஏன் 2 நாட்கள் கழித்து நடக்கிறது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டியது தானே? என பொருள்படும்படி உபேந்திரா இந்த கேள்வியை எழுப்பி இருந்தார்.

விமர்சனம் செய்த மக்கள்
இதை பார்த்த மக்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஓட்டுப்பதிவு முடிந்தும் பல நடைமுறைகள் இருக்கின்றன. மேலும் ஓட்டுப்பதிவு சமயத்தில் முறைகேடு நடந்திருந்தால் குறிப்பிட்ட பூத்களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த நேரம் அவசியம். மேலும் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அனைத்து ஓட்டுச்சாவடிகளில் இருந்து இவிஎம் இயந்திரத்தை ஒன்று சேர்த்து ஸ்ட்ராங் ரூமில் ஒருங்கிணைக்கவே நேரம் ஆகும் வேளையில் உடனடியாக ஓட்டு எண்ணிக்கை என்பது சாத்தியமில்லை. இது கூட தெரியாமல் நீங்கள் இருக்கிறீர்களே? என பலரும் விமர்சனம் செய்தனர். இதுமட்டுமின்றி படப்பிடிப்பு முடிந்த உடனே திரைப்படங்களை ரிலீஸ் செய்யாமல் நீங்கள் ஏன் தாமதப்படும் நிலையில் ஓட்டு எண்ணிக்கை பற்றி மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என சாடினர்.

கடுப்பான உபேந்திரா
இதையடுத்து கடுப்பாகிப்போன உபேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இது டிஜிட்டல் ஓட்டுப்பதிவு தானே? ஓட்டுப்பதிவு எண்ணிக்கைக்கு 2 நாட்கள் தேவையா? இதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூற வேண்டும் என சொன்னேன். அப்பப்பா எவ்வளவு கமெண்ட்டுகள்? வாரே வாவ்.. அப்படியே அரசியலை வியாபாரமாக பார்ப்பது, ஊழல், குதிரை பேரம் பற்றியும் கமெண்ட்டாக கூறினால் நன்றாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் ஊழல் இல்லாத கட்சிக்கு நீங்கள் ஓட்டு செலுத்தி உள்ளீர்களா? அப்படி என்றால் அந்த கட்சியை சொல்லுங்கள் நாங்கள் ஓட்டு போடுகிறோம்? என கேள்வி கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications