ருசிக்க தூண்டும் தாவணகெரே வெண்ணெய் தோசை.. புவிசார் குறியீடுக்கு ‛நோ’ சொன்ன மத்திய அரசு.. பின்னணி
பெங்களூர்: பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் எனும் எண்ணத்தை தூண்டும் கர்நாடகாவில் மிகவும் பேமஸான ‛தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு’ புவிசார் குறியீடு வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும் தற்போது ‛தாவணகெரே வெண்ணெய் தோசை’ அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதனால் புவிசார் குறியீடு தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெண்ணெய் தோசை.. தோசைகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த வெண்ணெய் தோசை. சாதாரணமாக சுடப்படும் தோசையின் மீது எண்ணெய் அல்லது நெய்க்கு பதிலாக வெண்ணெயை பயன்படுத்தி இந்த தோசை சுடப்படும்.

தோசையின் ஒருபுறம் வெண்ணெய் உருகி நிற்க.. இன்னொரு புறம் நல்ல மொறுமொறுவென வெந்து இருக்கும். அதன்பிறகு வெண்ணெய் தோசையை லேசாக திருப்பி போட்டால் சுவையான வெண்ணெய் தோசை என்பது உருவாகி விடும்.
இந்த வெண்ணெய் தோசை என்பது கர்நாடகாவில் மிகவும் பிரபலம். குறிப்பாக கர்நாடகாவின் தாவணகெரே வெண்ணெய் தோசை என்றால் மிகமிக பிரபலம். இந்த தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு தனி ரசிகர்களே உள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு காரணம் வெண்ணெய் தோசை என்பது தாவணகெரேயில் தான் பிறந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு தான் வெண்ணெய் தோசை என்பது பிற இடங்களுக்கும் பரவியது. இந்நிலையில் தான் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தனித்துவத்தை குறிக்கும் வகையில் ஜிஐ எனும் புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு ஊருக்கென்று தனித்துவமான மற்றும் சிறப்பு பண்புகளுடன், அந்த ஊரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கக்கூடிய தயாரிப்புகள் பல உள்ளன.
உதாரணமாக திருநெல்வேலி அல்வா. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திருப்பதி லட்டு உள்ளிட்ட உணவு பொருட்கள் அந்தந்த பகுதிகளில் மிகவும் பிரபலம். ஆனால் அந்த குறிப்பிட்ட பலகாரங்களின் பெயர்களில் போலி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தடுக்கவும், போலிகளில் இருந்து நயமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், பொருட்களின் உண்மையான உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக உருவானது தான் புவிசார் குறியீடு.
இரவில் திடீரென உடைந்த மதகு.. கர்நாடகாவின் மிகப்பெரிய துங்கபத்ரா அணையால் ஆபத்து.. பெரும் வெள்ளம்
ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் எனில் அந்த ஊர் மக்களை தவிர வேறு ஊர் மக்கள் அந்தப் பெயரை பயன்படுத்தி அந்த பொருளை தயாரிக்க முடியாது. இதன் மூலம் போலிகள் தயாரிப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி அந்த ஊர் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைகிறது. அந்த வகையில் தாவணகெரே வெண்ணெய் தோசைக்கும் புவிசார் குறியீடு என்பது கோரப்பட்டது.
இந்நிலையில் தான் தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு புவிசார் குறியீடு கேட்கப்பட்டது. தாவணகெரே நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பி டாக்டர் பிரபா மல்லிகார்ஜூன் சார்பில் ‛தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரினார். ஆனால் ‛தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு புவிசார் குறியீடு வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக நடந்து முடிந்த லோக்சபா கூட்டத்தொடரில் மத்திய வணிக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தாவணகெரே வெண்ணெய் தோசை என்பது கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. தாவணகெரே மட்டுமின்றி பிற இடங்களில் இந்த தோசை பிரபலம். பரவலாக அனைத்து இடங்களில் இந்த வெண்ணெய் தோசை கிடைக்கிறது.
புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு என்று தனித்தன்மை வேண்டும். குறிப்பிட்ட பிராந்தியத்துக்கானதாக இருக்க வேண்டும். மேலும் பிரத்யேக தயாரிப்பு முறையை கொண்டிருக்க வேண்டும். தற்போது வெண்ணெய் தோசை அனைத்து இடங்களில் தயாரிக்கப்படுகிறது. இதனால் அது தனித்துவமான பிராந்திய அடையாளத்தை இழக்கிறது'' எனக்கூறினார். இதன்மூலம் தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்க மறுத்துள்ளது.
இதுபற்றி புவிசார் குறியீடு கேட்ட காங்கிரஸ் எம்பி டாக்டர் பிரபா மல்லிகார்ஜூன் கூறுகையில், ‛‛ நாடாளுமன்றத்துக்கு நான் முதல் நாள் சென்றவுடன் பலரும் தாவணகெரே வெண்ணெய் தோசை பற்றி என்னிடம் கேட்டனர். அப்போது தான் தாவணகெரே வெண்ணெய் தோசைக்கு புவிசார் குறியீடு எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தேன். தற்போது ரசகுல்லா, லோனாவாலா சிக்கி மற்றும் பிற உணவு பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தாவணகெரே வெண்ணெய் தோசை கர்நாடகா மழுவதும் விற்பனை செய்யப்படுவதை சுட்டிக்காட்டி புவிசார் குறியீடு தர மத்திய அரசு மறுக்கிறது. இதற்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications