குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை.. ஒரு கேன் வாங்கவே 1 மணி நேரம் லைன்.. கதி கலங்கி நிற்கும் பெங்களூர்!
பெங்களூர்: பெங்களூரில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக அங்கே இருக்கும் மக்களுக்கு குடிக்க, குளிக்க கூட தண்ணீர் இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோடை காலம் இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக பெங்களூர் திண்டாட தொடங்கி உள்ளது. பெங்களூரில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் டேங்கர்கள் விலையை உயர்த்துவதாக அங்கே குடியிருப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். பெங்களூருவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டேங்கர் நிறுவனங்களே தண்ணீர் வழங்க முடியாமல் தவிக்க தொடங்கி உள்ளன.
என்ன காரணம்?: மழைப்பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன..
பெங்களூரின் நீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைப்பான பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), காவிரி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரைப் பெறுகிறது. ஆனால் இந்த முறை குறைவான மழையால் காவிரியில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் இணைப்புகள் இல்லாத பகுதிகள் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரை நம்பியே உள்ளன. அவையும் வற்ற தொடங்கி உள்ளன.
பெங்களூரில் காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதே வேளையில், நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறைதான் தண்ணீர் பிரச்சனைக்கு பெரிய காரணம்.
தனியார் டேங்கர்கள் இதனால் தண்ணீர் விலையை இருமடங்காக விலை உயர்த்தியுள்ளனர். 1,500 ரூபாய் என்று டேங்கருக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில், தனியார் லாரிகளுக்கு, 6,000 ரூபாய் செலவு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இது வெறும் 700 ரூபாயாக இருந்தது. அங்கே இன்னும் கோடை காலமே தொடங்கவில்லை. அதற்குள் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லை: இந்த நிலையில்தான் பெங்களூரில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக அங்கே இருக்கும் மக்களுக்கு குடிக்க, குளிக்க கூட தண்ணீர் இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு நகரின் பல பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள், அவை பெரும்பாலும் தண்ணீர் பஞ்சம் காரணமாக மிக அதிகப்படியான தொகையை வசூலிக்கின்றன.
அங்கே தண்ணீர் கேன்கள் வாங்க கூட ஒரு மணி நேரம் லைனில் நிற்க வேண்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் ஒரு லாரி நீர் சில இடங்களில் 5 ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்பனை ஆகிறது. அந்த அளவிற்கு அங்கே மோசமான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எச்சரித்தபடியே தண்ணீர் பஞ்சம்: தென் ஆப்ரிக்க நகரமான கேப் டவுனில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்நகரின் கடைசி சொட்டு தண்ணீரும் தீர உள்ள நிலையில் ஜீரோ டேவை நெருங்குகிறது கேப் டவுன். இந்நிலையில் கேப்டவுனை போன்றே கடைசி சொட்டு தண்ணீரை அடுத்து இழக்கவுள்ள உலகின் 11 நகரங்களின் பட்டியலை கடந்த 2018ம் வருடம் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.
அதன்படி அந்த பட்டியலில் பிரேசிலின் சா பாலோ நகர் முதலிடத்திலும் இந்தியாவின் பெங்களூரு நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. பெங்களூரு நகரில் பாதிக்கும் மேற்பட்ட குடிநீர் தீர்ந்துவிடும், அதன்பின் குடிநீர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications