"தென்னிந்தியாவுக்கு தனி நாடு!" நான் சொல்வதில் என்ன தப்பு? கர்நாடக துணை முதல்வரின் சகோதரர் சர்ச்சை
பெங்களூர்: தென்னிந்தியாவுக்குத் தனி நாடு தேவை என்று காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் கூறியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த பிப். மாதம் தென்னிந்தியாவை மத்திய அரசு வஞ்சிப்பதாகத் தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ், தென்னிந்தியாவுக்குத் தனி நாடு தேவை என்பது போல கருத்து கூறியிருந்தார்.

இது தேசியளவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இந்தச் சூழலில் தனது பேச்சு தொடர்பாகக் கர்நாடக காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் விளக்கமளித்துள்ளார்.
தவறு இல்லை: தனது தனி நாடு கருத்தில் தவறு இல்லை என்று சொன்ன டிகே சுரேஷ் இந்த எண்ணம் பொதுமக்களின் மனதில் இன்னும் இருக்கவே செய்வதாக அவர் தெரிவித்தார். மேலும், கர்நாடகா மீது மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், முக்கிய திட்டங்களுக்குக் கூட நிதி தர வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. இந்த எண்ணம் பொதுமக்களின் மனதில் இருக்கவே செய்கிறது. மத்திய அரசு கர்நாடகாவைப் பாரபட்சமாக நடத்துகிறது. இதனால் நாம் செலுத்தும் வரியில் பெரும்பகுதியை நாம் இழக்கிறோம், மாநிலத்தில் வறட்சி ஏற்படும் போதும் அதற்குத் தீர்வு கிடைப்பதில்லை.
நிதி தருவதில்லை: கர்நாடகாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்தி வருகிறார். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் எங்களுக்கு ஏன் நிதி தரவில்லை? இது மாற்றாந்தாய் மனப்பான்மை தானே.. மேகதாது, கலசா பண்டூரி திட்டங்களுக்கு அவர்கள் இன்னும் அனுமதிக்கவில்லை, மத்திய அரசு பல வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் அதற்கு நிதி தருவதில்லை. இதனால் பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன சொன்னார்: கடந்த பிப். மாதம் தென்னிந்தியாவிற்கு "தனி நாடு" வேண்டும் என்று கூறி டி.கே.சுரேஷ் பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். கர்நாடகாவிற்கு மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை என்று கூறி அவர் இந்த பரபர கருத்துகளைக் கூறியிருந்தார். தென்னிந்தியாவில் வர வேண்டிய நிதி வட இந்தியாவிற்கு அனுப்பப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தி மண்டலத்தின் நன்மைகளுக்காகத் தென்னிந்தியா வஞ்சிக்கப்படும் போது தனி நாடு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் டி.கே.சுரேஷ் அப்போது கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இப்போது தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். தான் பேசியதில் தவறு இல்லை என்றும் மக்கள் நினைப்பதையே தான் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகதாது: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் சகோதரர் ஆன டிகே சுரேஷ் பெங்களூர் ரூரல் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி முன்பு முன்னாள் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி வசம் இருந்த தொகுதியாகும். டிகே சுரேஷ் மேகதாது விவகாரம் குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது மேகதாது திட்டம், மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் எங்கள் சொந்த நிலம் மற்றும் நிதியில் மேகதாது திட்டத்தை மேற்கொள்கிறோம். கர்நாடகா நீரைக் கர்நாடக பயன்படுத்த வேண்டும் என்கிறோம். அதில் என்ன தவறு. இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு தீர்ப்பாயத்தில் சமாளிக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் விரைந்து பணிகளை மேற்கொள்வோம்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications