ரமணா படபாணியில் மரணம் அறிவிப்பு! பிளாஸ்டிக் சர்ஜரியால் பலியான நடிகை சேத்தனா ராஜின் இறுதி நிமிடங்கள்
பெங்களூர்: கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ், பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது பலியானார். அதன்பிறகு ‛ரமணா' படபாணியில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து தாமதமாக அவரது இறப்பு செய்தி அறிவிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சேத்தனா ராஜ் (வயது 21). இவர் பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதற்காக சேத்தனா ராஜ் நேற்று பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு நேற்று மதியம் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது. இதையடுத்து நுரையீரலில் நீர் தேங்கி அவர் இறந்துள்ளார்.
கிணறு வெட்ட கிளம்பிய பூதம்..! சென்னை மெரினாவில் தோண்ட தோண்ட கள்ள சாராயம்! திகைத்து நின்ற போலீஸ்..!
வெளியான காரணம்
சேத்தனா ராஜின் இறப்பு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பிளாஸ்டிக் செய்யும் நபர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சேத்தனா ராஜ் இறப்புக்கான காரணம், அவரது பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த விவரங்கள் வருமாறு:
அழகில் அதிக ஆர்வம்
பெங்களூர் அப்பிகெரேயில் வசித்து வந்தவர் சேத்தனா ராஜ். இவர் கீதா, துரெசானி, ஒலவினா நில்தானா ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். இவர் தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகமாக ஆர்வம் காட்டி வந்தார். தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும்போது கூட தன்னை அழகுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
ரூ.1.60 லட்சம் சிகிச்சை
இந்நிலையில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொழுப்பை கரைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார். அங்கு ரூ.1.60 லட்சம் செலவில் சர்ஜரி செய்வதாக கூறினார். இதையடுத்து நேற்று காலையில் சேத்தனா ராஜ் மருத்துவமனைக்கு சென்றார். முதற்கட்டமாக ரூ.92 ஆயிரம் செலுத்தினார்.
பிளாஸ்டிக் சர்ஜரி
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மதியம் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நுரையீரலில் நீர்கோத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மருத்துவமனையில் ஐசியூ உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகள் எதுவும் இல்லை. இதனால் அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பல்ஸ் இல்லாததால் சிகிச்சை
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு பல்ஸ் இல்லை. இதையடுத்து சிபிஆர் உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து நடிகை சேத்தனா ராஜ் இறந்ததாக கூறினர். இதற்கிடையே சேத்தனா ராஜ் 2வதாக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை சார்பில் பெங்களூர் பசவேஸ்வர் நகர் போலீசில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மிரட்டி நுழைந்த டாக்டர்
இன்று (அதாவது நேற்று) மாலை 5.30 மணியளவில் மயக்கமருந்து நிபுணரான டாக்டர் மெல்வின் மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் நோயாளி (சேத்தனா ராஜ்)ஒருவர் இருந்தார். இந்த டாக்டர் மருத்துவமனையில் அனைத்து விதிகளையும் மீறி காவலாளியை மிரட்டி உள்ளே நுழைந்தார். மேலும் நாங்கள் அந்த நோயாளியை பரிசோதனை செய்வதற்கு முன்பாகவே அவசர சிகிச்சை பிரிவில்(ஐசியூ) அனுமதித்தார்.
நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டதாக..
அதோடு பெங்களூர் ராஜாஜிநகர் நவ்ரங் தியேட்டர் அருகே உள்ள சிகிச்சை மையத்தில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறினார். ஆனால் டாக்டரின் பரிந்துரை கடிதம், சிகிச்சை அளித்த விபரம் உள்பட எந்த ஆவணங்களையும் அவர் வழங்கவில்லை. இருப்பினும் நாங்கள் பரிசோதித்து பார்த்தோம். அப்போது அவருக்கு பல்ஸ் இல்லை.
இறந்தது தெரிந்தும் 45 நிமிடம் சிகிச்சை
இருப்பினும் டாக்டர் மெல்வின் மற்றும் அவரது குழுவினரின் வலியுறுத்தலால் சிபிஆர் உள்ளிட்ட உயிர் காக்கும் முயற்சிகளை 45 நிமிடங்கள் வரை மேற்கொண்டோம். ஆனால் அது பயன் அளிக்கவில்லை. ஏனென்றால் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அந்த நபர் இறந்திருந்தார். இதுபற்றி அந்த டாக்டர் உள்பட மற்றவர்கள் அறிந்திருந்தாலும் எங்களை கட்டாயப்படுத்தி சிகிச்சை அளிக்கும்படி கூறினார். மேலும் அந்த நோயாளியின் இறப்பை 6.45 மணிக்கு அறிவிக்கும்படி கட்டாயப்படுத்தினர். இதனை கடுமையாக கண்டித்தோம். மேலும் சம்பவம் குறித்து உங்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவே இந்த அறிக்கையை சமர்பிக்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
இதன்மூலம் ஏற்கனவே இறந்து போன சேத்தனா ராஜை இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு டாக்டர், ஊழியர்களை மிரட்டி இறந்தவருக்கு சிகிச்சை அளிக்க வைத்ததும் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.