பிரதமர் மோடியை கொல்ல முயற்சி? பாதையில் கிடந்த வெடிமருந்து! பெங்களூரில் தகவல் கொடுத்தவரே கைது!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பிரதமர் செல்லவிருந்த பாதையில் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரதமர் மோடி இன்றைய தினம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், அதையும் தாண்டி பிரதமர் நிகழ்ச்சிக்கு அருகே வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது. இதனால் மிகப் பெரிய பாதுகாப்புப் பதற்றம் ஏற்பட்டுள்ளது..

வெடிமருந்து
பெங்களூருவின் கக்கலிபுரா அருகே உள்ள தாதகுனி பகுதியில், பிரதமர் மோடி பயணிக்கவிருந்த பாதையில் மர்மமான முறையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டது. இது ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அமைப்புகளையும் அதிர வைத்துள்ளது. குறிப்பாக, 'வாழும் கலை' அமைப்பின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மிக அருகிலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தப் பரபரப்பான சூழலில், வெடிபொருட்களைப் பற்றி போலீசாருக்குத் தகவல் கொடுத்த நபரே இப்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கோரமங்களா அருகே வசிக்கும் அந்த நபர், அதிகாலையிலேயே காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு எச்.ஏ.எல் (HAL) விமான நிலையம் மற்றும் வாழும் கலை மையம் அருகே குண்டுவெடிப்பு நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். உடனடியாக உஷாரான பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு இடங்களிலும் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஜெலட்டின் குச்சிகள்
எச்.ஏ.எல் பகுதியில் எதுவும் கிடைக்காத நிலையில், பிரதமரின் பயணப் பாதையில் இருந்த ஒரு பாலத்தின் அருகே இரண்டு ஜெலட்டின் குச்சிகள் வீசப்பட்டுக் கிடப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே சந்தேகத்தின் அடிப்படையில் தகவல் கொடுத்த நபரையே போலீசார் கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் அவர்
அந்த நபருக்கு ஏற்கனவே இது போன்ற விஐபி வருகைகளின் போது போலி மிரட்டல் விடுத்த வரலாறு உண்டு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முந்தைய காலங்களில் அவருக்கு மனநலப் பாதிப்புகள் இருப்பதாகக் கருதி போலீசார் அவரை எச்சரித்து விடுவித்துள்ளனர். ஆனால், இம்முறை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல், உண்மையில் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதால் போலீசார் இந்த விவகாரத்தை மிகவும் சீரியஸாகக் கையில் எடுத்துள்ளனர்.
தீவிர விசாரணை
தற்போது அந்த நபரின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் எங்கிருந்து கிடைத்தன, அவருக்குப் பின்னால் ஏதேனும் சதித் திட்டங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும், வாழும் கலை அமைப்புக்கு எதிரானவர்கள் இதில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
பிரதமர் மோடி அங்குச் செல்வதற்கு முன்பே இந்த வெடிபொருட்கள் கண்டறியப்பட்டதால் ஒரு மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவம் காரணமாகப் பெங்களூர் முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ள போலீசார், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications