தேர்தல் முடிந்த கையோடு மக்களுக்கு ஷாக் கொடுத்த கர்நாடக அரசு.. மின் கட்டணம் அதிரடியாக உயர்வு
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் மின்சார கட்டணத்தை கடந்த ஆண்டு மாநில அரசு உயர்த்தாமல் இருந்தது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் இன்று மின் கட்டணம் உயர்த்தப்பட்டு அதிரடியாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தேர்தல் ஜூரம் நிலவுகிறது. தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பல்வேறு சலுகைகளை கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு அறிவித்து இருந்தது.

பிரதமர் மோடியும் கர்நாடாவிற்கு அடிக்கடி விசிட் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதோடு பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்படி சலுகைகளை ஆளும் பாஜக தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அள்ளி வீசியது.
அதன்பிறகு தேர்தல் அறிவித்த பிறகு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்துள்ளன. குறிப்பாக 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதுபோல அனல் பறக்கும் பிரசாரங்களும் முடிந்து கடந்த 10 ஆம் தேதி தேர்தல் முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில், கர்நாடகாவில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக கர்நாடக மின்துறை சார்பில் வெளியான அறிக்கையில், அரசின் வருவாயில் மின்துறையின் பங்கும் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டுகளில் மின்துறையின் வருவாய் போதிய அளவு இல்லை.
இதனால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரிகட்டும் விதமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு யூனிட் மின்சாரம் 70 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 8.31 சதவீத உயர்வாகும். இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை பெங்களூரு மின்வாரியம், கே.பி.டி.சி.எல். உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் சார்பில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை அரசு உயர்த்தி வருகிறது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தாமல் இருந்தது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் இன்ற மின் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்த மறுநாளே மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மின் விநியோக நிறுவனங்கள் சராசரியாக ஒரு யூனிட்டிற்கு 139 பைசா உயர்த்த வேண்டும் என்று பரிந்துரையை முன்வைத்து இருந்தது.
அதாவது, 8,951.20 கோடி வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட 16.83 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை வைக்கப்பட்டு இருந்த நிலையில்,தற்போது 70 பைசா உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications