3,000 ஆபாச வீடியோ 5 ஆண்டுக்கு முந்தையது.. இப்ப எங்களுக்கு சத்திய சோதனை.. பிரஜ்வல் தந்தை ரேவண்ணா!
பெங்களூர்: தன் மகன் பிரஜ்வல் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரம்.. இதனை இப்போது கிளப்பிவிட்டிருக்கின்றனர்.. எங்கள் குடும்பத்துக்கு சத்திய சோதனை ஏற்பட்டிருக்கிறது என பிரஜ்வல் தந்தையும் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்குள்ளானவருமான ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல்தான் 3,000 ஆபாச வீடியோக்களில் சிக்கியவர். பல நூறு பெண்களை பலாத்காரம் செய்தவர் என்ற குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். தற்போது தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இரு கட்சிகளுக்குமே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசின் எஸ்.ஐ.டி. குழு விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரஜ்வல் எப்போது திரும்புவார்? அல்லது எஸ்ஐடி குழு வெளிநாடு சென்று பிரஜ்வலை அழைத்து வருமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிரஜ்வல் விவகாரம் அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பிரஜ்வல் தந்தை ரேவண்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆபாச வீடியோக்கள் என்பது 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்னரே கிளப்பிவிடப்பட்ட பழைய கதை. இதை இப்போது பெரித்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் என்ன அர்த்தம் என தெரியவே இல்லை.
எங்கள் குடும்பத்துக்கு இது சத்திய சோதனை. இதற்கு எல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. நாங்கள் எங்கேயும் ஓடி ஒளியவும் இல்லை. பிரஜ்வல் ரேவண்ணாவின் வெளிநாட்டு பயணம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான். எஸ்ஐடி குழு விசாரணைக்கு அழைத்தால் பிரஜ்வல் ஆஜராவார்.
தேவகவுடா குடும்பத்துக்கு இத்தகைய சத்திய சோதனைகள் புதியதும் அல்ல. இது போல பல விசாரணைகளை எதிர்கொண்டிருக்கிறோம். தேவகவுடாவிடமும் சிஐடி போலீசார் விசாரித்தனர். சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். இவ்வாறு ரேவண்ணா கூறினார்.
இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று 2-வது நாளாக தேவகவுடா குடும்பத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். பெங்களூரில் முன்னாள் முதல்வர் குமாரசாமி வீடு முன்பாக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications