பாஜகவுக்கு எதிர்ப்பு.. இளைஞரின் PayCM டீசர்ட்டை கழற்றிய போலீஸ்! பரபர கர்நாடகா பாரத் ஜோடோ யாத்திரை
பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக அரசு ஊழல் செய்கிறது என்பதை குறிக்கும் வகையில் ‛PayCM' என டீசர்ட் அணிந்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இளைஞர் ஒருவர் பங்கேற்றார். இதையடுத்து அவரின் டீசர்ட்டை போலீசார் கழற்றி வெறும் பனியனுடன் நிற்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவரது அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பசவராஜ் பொம்மையின் அரசு 40 சதவீத கமிஷன் பெற்று ஊழலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்து வருகிறது.
இனி மின்னல் வேகம்தான்.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் 5 ஜி சேவையை தொடங்கியது.. என்ன ஸ்பீட் தெரியுமா?
40 சதவீத கமிஷன் அரசு
அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக அரசின் ஊழல், கமிஷன் தொடர்பாக புகார் அளிக்க ‛40 சதவீத கமிஷன் அரசு' எனும் பெயரில் 40percentsarkara.com இணையதளத்தை காங்கிரஸ் கட்சி துவங்கி உள்ளது. மேலும் 8447704040 என்ற எண்ணில் புகாரளிக்கவும் காங்கிரஸ் கட்சி வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
PayCM போஸ்டர் சர்ச்சை
மேலும் பேடிஎம் ஸ்கேனர் போன்று PayCM எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் பெங்களூரின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில் அரசு சார்பில் 40 சதவீத கமிஷன் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜக அரசின் ஊழல் தொடர்பான விபரங்கள் அதில் உள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் போஸ்டர்களை கிளிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்தனர்.
கர்நாடகத்தில் பாத யாத்திரை
இந்நிலையில் தான் தற்போது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தமிழகம், கேரளாவை தொடர்ந்து 3வது மாநிலமாக கர்நாடகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை இன்று 2வது நாளாக நடக்கிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞரின் PayCM டீசர்ட்
இந்நிலையில் ராகுல்காந்தியின் நடைப்பயணம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வழியாக மைசூரை சென்றடைந்தது. இதில் கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாநிலம் சிந்தகி பகுதியை சேர்ந்த அக்சய் என்பவர் பங்கேற்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் கொடியை கையில் ஏந்தி பாஜக அரசை 40 சதவீத கமிஷன் அரசு என குற்றம்சாட்டும் வகையில் ‛PayCM' எனும் க்யூஆர் கோட்டுடன் அவர் அணிந்திருந்தார்.
டீசர்ட்டை கழற்றிய போலீஸ்
இதையடுத்து அக்சயை பிடித்த போலீசார் டீசர்ட்டை கழற்ற கூறினர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரது டீசர்ட்டை கழற்றி வெறும் பனியனுடன் நிற்க வைத்தனர். அதன்பிறகு அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பாரத் ஜோடோ யாத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.