கோயில், மசூதி, சர்ச்.. ஒரே நாளில் அடுத்தடுத்து சென்று ஆசி பெற்ற ராகுல்! உற்றுப் பார்க்கும் கர்நாடகா
பெங்களூர்: ராகுல் காந்தி கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மடம், மசூதி மற்றும் தேவாலயத்துக்கு அடுத்தடுத்து சென்று ஆசி பெற்றார்.
காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ராகுல் காந்தி பாத யாத்திரை செல்கிறார். குமரியில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் நிறைவடைகிறது.
பாஜகவுக்கு எதிராக மக்களை இந்த பாத யாத்திரை மூலம் இணைப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. இதற்குத் தொடக்கம் முதலே பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

ராகுல் காந்தி
முதலில் தமிழ்நாட்டில் பாத யாத்திரையைத் தொடங்கி ராகுல் காந்தி, அதன் பின்னர் கேரளாவுக்குச் சென்றார். அங்கு மொத்தம் 19 நாட்கள் அவர் பாத யாத்திரை சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார். கேரளாவில் பாத யாத்திரை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி இப்போது கர்நாடகாவில் நடைப்பயணம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி மிகவும் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று.

கர்நாடகா
அங்கு அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இன்று ஒரே நாளில் ராகுல் காந்தி மடம், மசூதி மற்றும் தேவாலயத்துக்கு அடுத்தடுத்து சென்று ஆசி பெற்றார். இது தொடர்பான படத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார்.

மடம், மசூதி, சர்ச்
இன்று மைசூரில் உள்ள சுத்தூர் மடத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். இன்று ராகுல் காந்தி மைசூரில் உள்ள மஸ்ஜித்-இ-ஆஜாமுக்கு சென்று இருந்தார். அதேபோல அவர் நகரில் உள்ள செயின்ட் பிலோமினா தேவாலயத்திற்கும் சென்று, அங்குள்ள பாதிரியார்களைச் சந்தித்து உரையாடினர்.

உரையாடல்
அதைத் தொடர்ந்து மைசூரில் அவர், மேலும் சில இடங்களில் பாத யாத்திரை சென்றார். அங்குப் பெண் நெசவாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார், ஊதிய உயர்வு, விநியோக சங்கிலி, உள்கட்டமைப்பு என்று பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியதாகக் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

சோனியா காந்தி
பாத யாத்திரையில் கலந்து கொள்ளச் சோனியா காந்தியும் மைசூர் வந்துள்ளார். பாத யாத்திரையில் இரு நாட்கள் பிரேக் எடுக்கும் நிலையில், சோனியா காந்தி வியாழக்கிழமை இதில் இணைய உள்ளார். அவர் இப்போது அங்குள்ள உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்குகிறார். கட்சியின் பொது நிகழ்ச்சி ஒன்றில் நீண்ட காலத்திற்குப் பின்னர் சோனியா காந்தி கலந்து கொள்வதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கொட்டும் மழை
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, கர்நாடகா மாநிலம் நஞ்சன்கூடில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரா ஸ்வாமி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொட்டும் மழையிலும் கூட ராகுல் காந்தி பேசுவதை அங்குக் கூடி இருந்த தொண்டர்கள் ஆர்வமாகக் கேட்டார்கள்.












Click it and Unblock the Notifications