செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்?
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற ராமலிங்க ரெட்டி இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்த ராமலிங்க ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் கர்நாடகா - தமிழ்நாடு எல்லை அத்திப்பள்ளியில் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் திடீரென்று மாயமாகி உள்ளார். ராமலிங்க ரெட்டி தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா முதல்வராக நேற்று முன்தினம் டிகே சிவக்குமார் பதவியேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாகினர். பெங்களூர் பிடிஎம் லே-அவுட் சட்டசபை தொகுதியில் வென்று எம்எல்ஏவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர் ராமலிங்க ரெட்டியும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

நேற்று இரவு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. ராமலிங்க ரெட்டிக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டது.
இதனால் ராமலிங்க ரெட்டி கடும் அதிருப்தியடைந்தார்.
ராமலிங்க ரெட்டி பெங்களூரை சேர்ந்த எம்எல்ஏவாக உள்ளார். 4 முறை ஜெயநகர் தொகுதி, 4வது முறையாக பிடிஎம் லே-அவுட் தொகுதி என 8 வது முறையாக எம்எல்ஏவாக இருக்கிறார். சீனியர் தலைவராக இருக்கும் ராமலிங்க ரெட்டிக்கு பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பதவி தருவதாக முதல்வர் டிகே சிவக்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் பெங்களூர் நகர வளர்ச்சி துறைக்கு பதில் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டதால் ராமலிங்க ரெட்டி அதிருப்தியடைந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெங்களூர் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராமலிங்க ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு முதல்வர் டிகே சிவக்குமாருக்கு அனுப்பி வைத்தார். மேலும் தனது மனசாட்சிக்கு விரோதமாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் ராஜினாமா செய்கிறேன் என்று கூறி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்று காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அவரது காரை ஆதரவாளர்கள் தடுத்தனர். ஆனால் ராமலிங்க ரெட்டி எதுவும் பேசாமல் இருந்ததோடு காரில் புறப்பட்டு சென்றார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பை முடித்த ராமலிங்க ரெட்டி உடனடியாக காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட்டு சென்றார். அவரை பல மூத்த தலைவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் ராமலிங்க ரெட்டி எங்கே சென்றார்? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அவர் உடனடியாக கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் அமைந்து இருக்கும் தனியார் ஹோட்டலுக்கு சென்று அவர் தனது ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட ராமலிங்க ரெட்டி தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. மேலும் மேலிட தலைவர்கள் தன்னை சமாதானம் செய்ய முயலலாம் என்பதால் ராமலிங்க ரெட்டி தனது செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இந்த தகவல் ராகுல் காந்திக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவின் வேட்பு மனு தாக்கலுக்காக இன்று ராகுல் காந்தி பெங்களூர் வந்திருந்தார். அப்போது அவரிடம் ராமலிங்க ரெட்டியின் ராஜினாமா பற்றி தெரிவிக்கப்பட்டது.
இதனால் கோபமான ராகுல் காந்தி, ''ராமலிங்க ரெட்டியை சமாதானம் செய்யும்படி கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீர் சுர்ஜேவாலாவிடம் கூறினார். சமாதானம் செய்து ராஜினாமா முடிவை திரும்ப பெற வையுங்கள். ஆனால் பிடிவாதம் பிடித்தால் ராஜினாமாவை ஏற்கும்படி தெரிவித்துவிடடுங்கள். ஏனென்றால் இப்படி அடுத்தடுத்து தலைவர்கள் யாரும் செய்யக்கூடாது'' என்று கறாராக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications