மனைவி வங்கி கணக்கிற்கு வந்த ரூ.999 கோடி! இன்ப அதிர்ச்சியான டீக்கடைகாரரருக்கு வந்த புது பிரச்சனை
பெங்களூர்: பெங்களூரில் டீக்கடை நடத்தி வரும் பிரபாகர் என்பவரின் மனைவியின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.999 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இதனை பார்த்து பிரபாகர் இன்ப அதிர்ச்சியான நிலையில் தற்போது அவர் பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்.
பெங்களூரில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் அங்குள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (பெங்களூர் ஐஐஎம்) வளாகத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். டீ, காபி, ஸ்நாக்ஸ், குளிர்பானங்களை அவர் விற்பனை செய்து வருகிறார். இங்கு அவர் யுபிஐ பணப்பரிமாற்ற வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் பணம் என்பது பிரபாகரின் மனைவியின் வங்கி கணக்கிற்கு சென்று சேரும். பிரபாகரின் மனைவி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்கை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் பிரபாகர் தனது மனைவியின் வங்கி கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது? என்பதை செக் செய்தார்.
அப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக சில ஆயிரங்கள் மட்டுமே இருக்கும் அந்த வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. கோடி ரூபாய் என்றால் வெறும் ஒரு கோடி, 2 கோடி இல்லை. மொத்தம் ரூ.999 கோடி. இதனை கண்ட பிரபாகர் கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும் வங்கியில் இருந்து தவறுதலாக தனது வங்கி கணக்கிற்கு பணம் வந்திருக்கலாம் என்று அவர் உணர்ந்தார்.
இதுபற்றி வங்கிக்கு தகவல் கொடுக்கலாம் என்று நினைத்தார். இதற்கிடையே தான் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வங்கி கணக்கில் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் செய்ய முடியாதது தெரியவந்தது. இதையடுத்து அவர் வங்கிக்கு தகவல் தெரிவித்தார். அப்போது தவறுதலாக ‛‛வங்கி கணக்கில் ரூ.999 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் பணம் மீண்டும் எடுத்து கொள்ளப்படும். அதுவரை வங்கி கணக்கு முடக்கி வைக்கப்படும்'' என்று கூறியுள்ளனர்.
அதேபோல் 48 மணிநேரத்துக்கு முன்னதாக அவரது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.999 கோடி எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட அவரது வங்கி கணக்கு தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய பிரபாகர் கூறிய நிலையில் வங்கி நிர்வாகம் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரது வீட்டு முகவரி, ஆதார் அட்டை நகல் உள்பட பல விபரங்களை வங்கி நிர்வாகம் தொடர்ந்து கேட்டு தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது வங்கி கணக்கு முடக்கத்தால் பிரபாகரின் வியாபாரம் தொடர்பான பணப்பரிமாற்றம் மொத்தமாக முடங்கி உள்ளது. இதனால் பிரபாகர் சிக்கலை சந்தித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications