கர்நாடகாவில் CET தேர்வின் போது பிராமண மாணவர்களின் பூணூல்கள் வெட்டப்பட்ட விவகாரம்- ஹைகோர்ட் நோட்டீஸ்!
பெங்களூர்: கர்நாடகாவில் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான சிஇடி (Common Entrance Test- CET) தேர்வின் போது பிராமண மாணவர்களின் பூணூல் வெட்டப்பட்டது தொடர்பான வழக்கில் கர்நாடகா தேர்வாணையத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகாவில் சிஇடி தேர்வுகள் கடந்த 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற்றது. பீதரில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற இறுதித் தேர்வின் போது பிராமண மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற வேண்டும் என தேர்வு மையங்களில் அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தனர். சில இடங்களில் பூணூல் வெட்டி எறியப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது கர்நாடகா மாநிலத்தில் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடகா அரசு உறுதியளித்திருந்தது. பாஜக, ஜேடிஎஸ் தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தி, கர்நாடகா பிராமண மகாசபை சார்பில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. அதில், மாணவர்களின் பூணூல் அறுக்கப்பட்டது என்பது அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இந்த விசாரணையின் போது, பூணூல் கழற்றச் சொல்லப்பட்டதாக மாணவர் யார் என்கிற விவரங்கள் இல்லையே என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர்கள் தரப்பில், மாணவரின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது..
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிற மாணவருக்கு பொறியியல் படிப்புககன சீட் ஒதுக்கவும் கர்நாடகா அரசு முன்வந்துள்ளது; பூணூலை கழற்றச் சொன்ன அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கர்நாடகா மாநில அரசின் தேர்வானையம் பதிலளிக்க வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications