என் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்
Recommended Video
பெங்களூர்: ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக தலைவர்கள் மீது இன்று சட்டசபையில் அடுத்தடுத்து கடுமையான லஞ்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பாஜக தனக்கு ரூ .5 கோடி வழங்கியதாக கோலார் தொகுதி மஜத எம்எல்ஏ சீனிவாஸ் கவுடா, முதலில் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
"பாஜக தலைவர்கள் அஸ்வத்நாராயண், சிபி யோகேஷ்வர் மற்றும் எஸ்.ஆர். விஸ்வநாத் ஆகியோர் என் வீட்டிற்கு வந்து ரூ.5 கோடியை தந்தார்கள். மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால், எங்களை பணத்தால் வாங்க முடியாது. எனவே நான் திருப்பி கொடுத்துவிட்டேன்" என்றார்.
இதையடுத்து, தங்கள் கூட்டணி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்கவும், ஊழல் செய்யவும் முயன்றதற்காக பாஜக தலைவர்களுக்கு எதிராக காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், எல்லா குற்றச்சாட்டுகளையும் அவைக் குறிப்பில் பதிவாக அனுமதிப்பதாகவும், மக்களுக்கு இவர்கள் லட்சணம் தெரியட்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் குற்றச்சாட்டு
இதையடுத்து, மஜதவை சேர்ந்த சுற்றுலா துறை அமைச்சர் சா.ரா.மகேஷ் மற்றொரு குற்றச்சாட்டை தனது சக கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏவான எச்.ஏ.விஸ்வநாத் மீது வைத்தார். "மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, நான் விஸ்வநாத்தை அமைச்சராக்க விரும்புகிறீர்களா என்று கேட்டேன். அவரோ அதெற்கெல்லாம் ஆசை இல்லை என்று சொல்லி மறுத்தார்.

தேர்தல் கடன்
ஆனால் சட்டசபை தேர்தலுக்காக கடன் வாங்கி செலவிட்டதாக என்னிடம் கூறினார். பாஜக அவருக்கு ரூ .28 கோடி வழங்க முன்வந்ததாகவும், ஆனால் தேவேகவுடா எனக்கு போட்டியிட டிக்கெட் வழங்கியவர். அவருக்கு துரோகம் செய்ய மனது வரவில்லை. என்று என்னிடம் அவர் கூறினார்.
கடனைத் திருப்பிச் செலுத்த உதவுமாறு அவர் என்னிடம் கேட்டார். உதவி செய்வதாக உறுதியளித்தேன்.

அமெரிக்கா சென்றபோது ஜம்ப்
ஆனால் நான் அமெரிக்கா சென்றபோது, அங்கிருந்து அவரை மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். அவர் பின்னர் பேசுவதாக என்னிடம் கூறினார். ஆனால் அதிருப்தியாளராக மாறி திடீரென்று அவர் மும்பை சென்றார். அவர் எவ்வளவுக்கு விலை போனார் என்பது எனக்கு தெரியவில்லை" என்று மகேஷ் கூறினார்.

சத்தியம்
அது மட்டுமா, நான் சொல்வது எனது குழந்தைகள், மனைவி மீது சத்தியம் என்றும் சா.ரா.மகேஷ் ஆவேசமாக தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜதவினர் பாஜக தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி மும்பை ஓட்டலில் உள்ள விஸ்வநாத் நிருபர்களிடம் கூறுகையில், நான் சட்டசபைக்கு செல்லாத நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்த சபாநாயகர் அனுமதித்திருக்க கூடாது. சத்தியம் செய்வது மகேஷுக்கு கை வந்த கலை. நான் மஜத மாநில தலைவர் பதவியில் இருந்தவன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications