கர்நாடகா காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற தமிழக லாரி-நிலச்சரிவில் உயிருடன் மண்ணில் புதைந்த 7 பேர்!
பெங்களூர்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை உக்கிரமாக கொட்டி வருகிறது. உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். மேலும் காட்டாற்று வெள்ளத்தில் தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்த டேங்கர் லாரி ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் வெளுத்தெடுக்கும் தென்மேற்கு பருவமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. உத்தர கன்னடாவில் கங்கவாலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கங்கவாலி ஆற்று வெள்ளத்தால் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட 3 டேங்கர் லாரிகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்த டேங்கர் லாரியும் ஒன்று. இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 776 E மற்றும் தேசிய நெடுஞ்சாலை 66 ஆகியவை ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
ரங்கோலா அருகே ஷிரூரில் கங்கவாலி ஆற்று வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடு அப்படியே மண்ணில் புதையுண்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் புதையுண்டனர். இதேபோல் வேறு சில இடங்களிலும் நிலச்சரிவில் பலர் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்ப்பதால் அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்தும் அதன் கீழணையில் இருந்தும் 26,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கீழணைக்கு வரக் கூடிய 4,000 கன அடிநீர் மொத்தமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து அதிகமான அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழகத்துக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கர்நாடகா எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் ஒகேனக்கல் பாறைகள் முழும் பேரருவிகளாக உருமாறி உள்ளன. இதனால் ஒகேனக்கல்லில் மறு உத்தரவு வரும் வரை பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications