பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்: சரத்பவார் நாளை பங்கேற்பு- என்சிபி அறிவிப்பு! குழப்பம் ஓவர்
பெங்களூர்: காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் பெங்களூரில் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாளை பங்கேற்பார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சரத்பவார் பங்கேற்பது தொடர்பான குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுப்பதற்காக காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் இன்று பெங்களூரில் தொடங்குகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் பெங்களூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெங்களூர் நகரின் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்களை வரவேற்று பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அக்கட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் தலைமையிலான ஒரு கோஷ்டி ஆளும் பாஜக அரசில் இணைந்துவிட்டது. இதனையடுத்து அதிருப்தி கோஷ்டியினர் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை சரத்பவார் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே மும்பையில் நேற்று அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் அஜித் பவார், ஃபிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் திடீரென சரத்பவாரை சந்தித்தனர். அப்போது, தேசியவாத காங்கிரஸ் ஒன்றாக இருக்க வேண்டும் என தாங்கள் கேட்டுக் கொண்டதாக அவர்கள் கூறினர். ஆனாலும் சரத்பவார் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் செய்தியாளர்களிடம் ஃபிரபுல் பட்டேல் தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் இன்று பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருப்பதாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் நாளை சரத்பவார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் சரத்பவார் பங்கேற்பது குறித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications